தொடர்ந்து கிரிக்கெட் தொடர்கள்
இந்திய அணி சமீப காலத்தில் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் ஆடி வருகிறது. இதனால், வீரர்களின் உடல்நிலை குறித்த கவலை அதிகரித்து வருகிறது. பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து காயத்தில் சிக்குவதும் வாடிக்கையாகி வருகிறது.
சுழற்சி முறை ஓய்வு
இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா, பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆகியோருக்கு சில தொடர்களில் ஓய்வு அளிக்கப்பட்டது.
அடுத்து வரும் தொடர்கள்
இந்தியா அடுத்து இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக இந்திய மண்ணில் கிரிக்கெட் தொடரில் ஆட உள்ளது. அடுத்து நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. மார்ச் மாதம் வரை இந்திய அணி இடைவெளி இல்லாமல் கிரிக்கெட் விளையாட உள்ளது.
உள்ளூர் தொடர்கள்
இதற்கிடையே இளம் இந்திய வீரர்கள் தற்போது நடந்து வரும் ரஞ்சி ட்ராபி தொடரிலும் ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது. முக்கிய வீரர்கள் போல அவர்களுக்கும் ஓய்வு தேவை என முடிவு செய்தது இந்திய அணி.
ஸ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே
இந்திய டி20 அணி மற்றும் ஒருநாள் அணியில் இடம் பெற்று வரும் ஸ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே ரஞ்சி தொடரில் மும்பை அணிக்கு ஆட மறுத்து ஓய்வு எடுத்தனர். மும்பை அணி, ரயில்வே அணியிடம் மிக மோசமாக தோல்வி அடைந்தது.
விமர்சனம்
இதையடுத்து, ஸ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே ஏன் மும்பை அணிக்கு ஆட மறுத்தனர் என்ற விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து பத்திரிக்கைகளிலும் செய்தி வெளியாகி இருவரும் சிக்கலுக்கு உள்ளாகினர்.
நவ்தீப் சைனி
ஸ்ரேயாஸ் ஐயர், துபே விவகாரத்தை அடுத்து டெல்லி அணிக்கு நவ்தீப் சைனி ஆட மறுத்தது பற்றியும் விமர்சனம் எழுந்தது. சைனி இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மயங்க் அகர்வால்
டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் பெற்று வந்த மயங்க் அகர்வால் கர்நாடகா அணிக்காக ரஞ்சி ட்ராபி தொடரில் இரண்டு போட்டிகளில் பங்கேற்றார். அவர் இனி வரும் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தெரிவித்து இருக்கிறார்.
உண்மை என்ன?
இந்திய வீரர்கள் தொடர்ந்து ரஞ்சி ட்ராபி தொடரில் ஆட மறுத்து வருவது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. வீரர்கள் தாங்களாகவே ஆட மறுத்து வந்தாலும், அவர்களை அந்த முடிவை எடுக்குமாறு கூறியது இந்திய அணி தான்.
தவிக்கும் இளம் வீரர்கள்
இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் நிதின் பட்டேல் மற்றும் உடற்பயிற்சி நிபுணர் நிக் வெப் தான் என தெரிய வந்துள்ளது. அணியின் முடிவுகளால் இளம் வீரர்கள் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மாநில அணிகளுக்கு பிசிசிஐ ஏன் இது குறித்த தகவல் பரிமாற்றத்தை செய்வதில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.