சுப்மான் கில்
இந்திய அணியின் தொடக்க வீரராக ஏற்கனவே தனது திறமையை சுப்மான் கில் நிரூபித்துள்ளார். ஆனால் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் தொடக்க வீரராக இருப்பதால், சுப்மான் கில்லுக்கு இடம் இருக்காது. இதனால் சுப்மான் கில்லை நடுவரிசையில் களமிறக்கலாம். இதன் மூலம் புதிய பந்தை எதிர்கொள்ள வேண்டிய சிக்கல் இல்லாமல் சுப்மான் கில் தனது இயல்பான ஆட்டத்தை ஆடலாம்.
ஸ்ரேயாஸ் ஐயர்
இந்திய டெஸ்ட் அணியின் நடுவரிசைக்கு ஸ்ரேயாஸ் ஐயர் நிரந்தர இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம் விளாசி தனது திறமையை நிரூபித்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். இதனால், ஸ்ரேயாஸுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி அவரை ஊக்குவிக்க வேண்டும்.
விஹாரி
டெஸ்ட் Specialist ஆக அறிமுகமாகியுள்ள விஹாரி கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் தனது திறமையை வெளிகாட்டி வருகிறார். டெஸ்ட் அணியில் இவர் பெயர் தான் முதலில் இருக்க வேண்டும். ஆனால், பி.சி.சி.ஐ. இவருக்கு உரிய வாய்ப்பை வழங்கவில்லை. இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் வீரராக விளங்கும் வாய்ப்பு விஹாரிக்கு உள்ளது.
ருத்துராஜ்
இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக உருவெடுக்கும் அத்தனை தகுதியும் ருத்துராஜ் கெய்க்வாட்-க்கு உள்ளது. ஒருநாள், டி20 அணியில் தனது திறமையை நிரூபித்துள்ள ருத்துராஜ் டெஸ்ட் அணியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். ருத்துராஜுக்கு தேர்வுக்குழுவினர் விரைவில் அந்த வாய்ப்பை வழங்க வேண்டும
சர்ஃபிராஸ் கான்
அதீத திறமை இருந்தும், அதற்கான இடம் கிடைக்காத வீரர் சர்ஃபிராஸ் கான். ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக அதிரடியாக ஆடக் கூடிய வீரர். சர்ஃபிராஸ் கானுக்கு வயது இருக்கும் போதே வாய்ப்பு வழங்கி கவுரவிக்க வேண்டும். சராசரி 60க்கு மேல் வைத்திருக்க கூடிய அவர் முச்சதமும் விளாசியுள்ளார்.
அபிமன்யூ ஈஸ்வரன்
டெஸ்ட் அணிக்காகவே உருவாக்கப்பட்ட அபிமன்யூ ஈஸ்வரன் தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக சதம் விளாசி இருக்கிறார். திறமையான டெஸ்ட் வீரராக அறியப்படும் ஈஸ்வரனுக்கு பேட்டிங்கில் புஜாராவுக்கு பதில் இடம் தரலாம். இத்தனை வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் போது தேர்வுக்குழுவினர் இவர்களை கண்டகொள்ளாமல் இருப்பது சரி அல்ல