இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அண்டர் 19 அணிக்கு பயிற்சியாளராக இருக்க அந்த நாட்டின் முன்னாள் வீரர் யூனிஸ் கான் மறுத்து விட்டார் என கூறப்படுகிறது.
இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் தலைமையிலான அண்டர் 19 அணி மற்றும் இந்தியா ஏ அணி பெரும் முன்னேற்றத்தை சந்தித்து, இந்திய அணிக்கு பல வீரர்களை அடையாளம் காட்ட உதவியாக இருந்தது.
அதை அப்படியே "ஈயடிச்சான் காப்பி" அடிக்க முயற்சித்த பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் யூனிஸ் கானை அண்டர் 19 அணிக்கு பயிற்சியாளராக நியமிக்க முடிவு செய்தது. யூனிஸ் கான் டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி சார்பாக 10,000 ரன்களை கடந்த முதல் வீரர் ஆவார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டிடம், யூனிஸ் கான் தனக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். மேலும், தானே பயிற்சியாளராகவும், தேர்வாளராகவும் இருக்க வேண்டும். அப்போது தான் தன்னால் அணியை முன்னேற்ற முடியும் என கேட்டுள்ளார்.
ஆனால், இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, யூனிஸ் கான், அண்டர் 19 அணி பயிற்சியாளர் பதவி வேண்டாம் என மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.