நிதியுதவி அளிக்கும் வீரர்கள்
பல வீரர்கள், வீராங்கனைகள் அரசுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். மக்களுக்கு உதவும் வகையிலான அறிவுரைகளையும் தொடர்ந்து கூறியபடி உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை தனது ஷாஹித் அப்ரிடி பவுண்டேஷன் மூலம் செய்து வருகிறார்.
ஷாஹித் அப்ரிடி பவுண்டேஷன்
இது பாகிஸ்தானில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உணவு, சானிட்டைசர் என பல வகையானதை பாதிக்கப்பட்ட, ஏழை மக்களுக்குக் கொடுக்கிறது அப்ரிடியின் பவுன்டேஷன். இதற்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள் வாழ்த்தும் பாராட்டும் ஆதரவும் தெரிவித்துள்ளனர். அதேபோல நம்முடைய யுவராஜ் சிங்கும், ஹர்பஜன் சிங்கும் கூட வாழ்த்து தெரிவித்து வீடியோ செய்தியை டிவிட்டரில் போட்டிருந்தனர். இதுதான் சர்ச்சையாகி விட்டது.
இது சோதனைக் காலம்
யுவராஜ் சிங் போட்டிருந்த செய்தியில், இது சோதனைக் காலம். இந்த நேரத்தில்தான் பாதிக்கப்பட்டோருக்கு குறிப்பாக ஏழை எளியவர்களுக்கு நாம் உதவ வேண்டும். அந்த வகையில் ஷாஹித் அப்ரிடியை நான் பாராட்டுகிறேன். அவருக்கு அனைவரும் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என கோரிக்கை விடுத்திருந்தார். இதேபோலத்தான் ஹர்பஜன் சிங்கும் செய்தி போட்டிருந்தார்.
ஆதரவை விரும்பாத ரசிகர்கள்
இது நல்ல விஷயம்தான் என்றாலும் கூட ரசிகர்களுக்கு இது பிடிக்கவில்லை. இருவரையும் விமர்சித்து டிவிட்டரில் கமெண்ட்டுகளைக் குவித்து விட்டனர். எப்படி அப்ரிடி பவுன்டேஷனுக்கு உதவி செய்யுங்கள் என்று இவர்கள் சொல்லலாம் என்பது அவர்களின் கோபம். மேலும் கடந்த காலத்தில் இந்தியா குறித்து அப்ரிதி பேசியதையும் நினைவு கூர்ந்து கமெண்ட் போட்டு வருகின்றனர். இதனால் டிவிட்டரே போர்க்களம் போல காணப்படுகிறது.