அபார வெற்றி
இரண்டாவது பேட் செய்து, 198 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிச் சென்ற இந்திய அணி, ஆட்டத்தின் கடைசி பந்தில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், அபாரமாக வெற்றி பெற்று அசத்தியது.
வெற்றிக்கு உதவிய யூவி
பல ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டிருந்த யுவராஜ் சிங் கடைசி ஓவரில் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து வெற்றிக்கு உதவி செய்தார்.
கட்டாய சிக்கல்
முதல் இரு டி20 போட்டிகளிலும் யுவராஜ்சிங்கிற்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்காத நிலையில், இப்போட்டியில் அவர் தனது பேட்டிங் திறமையை காண்பித்தாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினார்.
ரசிகர்கள் பொறுமல்
முதலில் பல பந்துகளை அவர் வீணடித்தபோது, ரசிகர்கள் ரொம்பவே கலங்கிப்போயினர். யுவராஜ் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதோ என்று நினைத்த ரசிகர்கள் அதிகம்.
அபார ஷாட்டுகள்
கடைசி ஓவரில் 17 ரன்களை அடித்தாக வேண்டிய நிலையில், முதல் பந்தை பவுண்டரிக்கும், 2வது பந்தை சிக்சருக்கும் தூக்கி, ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விடச்செய்தார் யுவராஜ்சிங். அந்த இரு ஷாட்டுகளும், இந்திய அணியின் வெற்றிக்கு வெகுவாக உதவி செய்தது.
தடுமாறிய யுவராஜ்
12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார் யுவராஜ்சிங். பவுண்டரி மற்றும் சிக்சருக்கு விளாசப்பட்ட அந்த இரு பந்துகளை தவிர்த்து, எஞ்சிய 10 பந்துகளை அவர் எதிர்கொண்டவிதம், பெரிதாக ஈர்ப்பை உருவாக்கவில்லை.
யுவராஜ் ஆற்றல்
இருப்பினும், யுவராஜ்சிங்கின் ஆற்றலில் நம்பிக்கையுள்ளதாக கூறியுள்ளார், சுனில் கவாஸ்கர். அவர் மேலும் கூறியதாவது: யுவராஜ்சிங் தனது ஆற்றலை இழக்கவில்லை. அவர் இந்திய அணிக்கு ஒரு பிளஸ். யுவராஜ்சிங் விஷயத்தில் இந்திய அணி பொறுமை காக்க வேண்டியது அவசியம்.
பவுலிங் இருக்கே
ஆஸ்திரேலிய மண்ணில், யுவராஜ்சிங், தனது பந்து வீச்சால் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலக கோப்பை டி20 தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதில், யுவராஜ்சிங் பந்து வீச்சு நன்கு எடுபடும். எனவே, 11 பேர் கொண்ட இந்திய அணியில், யுவராஜ்சிங் இடம்பெற வேண்டும் .
அதே அணி
உலக கோப்பைக்கான இந்திய அணியில், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இடம்பெற்ற வீரர்களே இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறேன். சிட்னியில் இந்திய அணி பெற்றது பெரிய வெற்றி.
ரெய்னாவுக்கும் ஷொட்டு
200 ரன்களை இரண்டாவதாக பேட் செய்து எட்டிப்பிடித்தது பெரிய விஷயம். சுரேஷ் ரெய்னாவும், யுவராஜ்சிங்கும், பதற்றமேயின்றி ஆடினர். டி20 வகை கிரிக்கெட்டை சரியாக படித்த வீரர்களில், ரெய்னாவுக்கு நிகர் யாருமில்லை. இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.