வெற்றிகரமான நாட்கள்
2007 உலகக் கோப்பையில், ஒரு ஓவரில் 6 பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டதாகட்டும், 2008' கெவின் பீட்டர்சன் தலைமையிலான இங்கிலாந்து அணி, இந்தியா சுற்றுப்பயணம் செய்த போது, முதல் இரு ஒருநாள் போட்டிகளிலும் அடுத்தடுத்து சதம் விளாசியதாகட்டும், இன்னும் எத்தனையோ தொடர்களில் வரிசையாக தொடர் நாயகன் விருது வென்றதாகட்டும், 2011 உலகக் கோப்பையின் தொடர் நாயகனாகட்டும்.. யுவராஜ் தான் வாழ்நாளில் சிறந்த நாட்களை, வெற்றிகரமான நாட்களை தோனி கேப்டன்ஷிப்பில் அனுபவித்தார்.
தீராத கோபம்
எனினும், தோனி மீது யுவராஜ் சிங் தந்தையான யோகராஜுக்கு எப்போதும் தீராத கோபமும், ஆத்திரமும் இருக்கிறது. தோனியை அவர் திட்டாத வார்த்தைகளே கிடையாது. தன் மகனுக்கு கிடைக்க வேண்டிய பேர், புகழ் எல்லாம் தோனிக்கு செல்வதாக அல்லது தோனி தட்டிப்பறித்ததாக அவர் எண்ணியதாக கூறப்பட்டது. எனினும், அப்போது கூட, தோனி - யுவராஜ் இடையே அணியில் எந்தவித மோதலும் ஏற்படவில்லை.
கேப்டன் பதவி
இந்த நிலையில் தான், 22 Yarns podcastக்கு அளித்த பேட்டியில், யுவராஜ் சிங் சில விஷயங்களை மனம் திறந்துள்ளார். அதாவது, 2007 டி20 உலகக் கோப்பையில் தனக்கு கேப்டன்ஷிப் கிடைக்கும் என்று தான் எதிர்பார்த்ததாக யுவராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், "இந்தியா 2007ல் 50 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பையை இழந்தது. இந்திய கிரிக்கெட் மிகவும் கொந்தளிப்புடன் இருந்தது. பின்னர் இரண்டு மாத இங்கிலாந்து சுற்றுப்பயணம் இருந்தது. பிறகு, ஒரு மாத தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணமும் இருந்தது. பின்னர் டி 20 உலகக் கோப்பை ஒரு மாதம் இருந்தது. மொத்தமாக நான்கு மாதங்கள் வெளியே இருக்க வேண்டிய நிலை. இதனால், சீனியர் வீரர்கள் தங்களுக்கு இடைவெளி தேவை என்று நினைத்தார்கள். வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில், டி 20 உலகக் கோப்பையை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த சூழலில் தான், டி20 உலகக் கோப்பையில் நான் இந்திய அணியின் கேப்டனாவேன் என்று எதிர்பார்த்தேன். பின்னர் எம்.எஸ். தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
தோனி தலைமையில்
ஆனால், ஒரு வீரனாக நீங்கள் அணிக்கு எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும். ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்தாலும், கங்குலி கேப்டனாக இருந்தாலும், யாராக இருந்தாலும் முடிவில் நீங்கள் அணிக்கு ஆதரவளிக்கும் வீரராக நீங்கள் இருக்க வேண்டும். 2007 உலகக் கோப்பையை நாங்கள் தொடங்கிய போது, அனைவரும் இளம் வீரர்களாக இருந்தோம். சர்வதேச அளவிலான பயிற்சியாளரோ, பெரிய பெயர்களோ அணியில் இல்லை. லால்சந்த் ராஜ்புட் அணியின் பயிற்சியாளராக இருந்தார். வெங்கடேஷ் பிரசாத் அணியின் பவுலிங் கோச்சாக இருந்தார். எந்தவித குறிக்கோளும் இன்றி, என்ன தெரியுமோ அதை விளையாடுவோம் என்று தான் தோனி தலைமையில் அனைவரும் தென்னாப்பிரிக்கா சென்றோம்" என்று தெரிவித்துள்ளார்.