யுவராஜ் சிங்
யுவராஜ் சிங் 2000மாவது ஆண்டில் அறிமுகம் ஆனார். தன் இரண்டாவது போட்டியிலேயே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 84 ரன்கள் குவித்து தன் பெயரை நிலை நாட்டினார். அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அப்போதே மேட்ச் வின்னர் என்ற அடையாளத்தை பெற்றார்.
வெற்றிகள்
அதன் பின் பல முக்கிய வெற்றிகளில் அவரது பங்கும் இருந்தது. 2002 நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில், கைப்புடன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி தேடிக் கொடுத்தார். 2007 டி20 உலகக்கோப்பை தொடரிலும் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்து முக்கிய கட்டத்தில் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
உலகக்கோப்பை நாயகன்
2011 உலகக்கோப்பை தொடரில் தன் ஆல் - ரவுண்டர் திறனால் பல போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொடுத்தார் யுவராஜ் சிங். அப்போது தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினார். அதன் பின் அவரது கிரிக்கெட் வாழ்வு திசை திரும்பியது.
புற்றுநோய்
யுவராஜ் சிங் புற்றுநோய் காரணமாக கிரிக்கெட்டை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்தார். பின் மீண்டும் அணிக்கு திரும்பினார். அவரால் இனி கிரிக்கெட்டே ஆட முடியாது என கூறிய நிலையில் அவர் அணிக்கு திரும்பியது பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது.
போதிய வாய்ப்பு இல்லை
யுவராஜ் சிங்கின் கடைசி சில ஆண்டுகள் மோசமாக அமைந்தது. இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய யுவராஜ் சிங் தனக்கு டெஸ்ட் போட்டிகளில் போதிய வாய்ப்பு கிடைக்காததை சுட்டிக் காட்டி இருக்கிறார்.
அனுபவம்
அனுபவங்கள், நல்லதோ,கெட்டதோ, அவை நமது வளர்ச்சி மற்றும் கற்றலின் ஒரு பகுதி. அதை நான் எப்போதும் ஏற்றுக் கொள்வேன். துவக்க காலம் முதல் 2011 உலகக்கோப்பை வரை, புற்றுநோய் போராட்டம் முதல் மீண்டும் களத்துக்கு திரும்பியது வரை நிறைய அனுபவங்கள் உள்ளன. அவை தான் என்னை இன்று எப்படி இருக்கிறேனோ அப்படி மாற்றியது என்றார் யுவராஜ் சிங்.
டெஸ்ட் வாய்ப்பு
"இப்போது திரும்பிப் பார்த்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் அதிக வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என நினைக்கிறேன். அப்போது சச்சின், ராகுல் டிராவிட், சேவாக், விவிஎஸ் லக்ஷ்மன், சவுரவ் ஆகியோருக்கு மத்தியில் இடம் கிடைப்பது கடினம்" என்றார் யுவராஜ் சிங்.
கங்குலி ஓய்வுக்குப் பின்..
எனது வாய்ப்பு சவுரவ் ஓய்வு பெற்ற பின் தான் வந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அப்போது எனக்கு புற்றுநோய் என தெரிய வந்தது. அத்துடன் என் வாழ்வு வேறு மாதிரி திசை திரும்பி விட்டது என்று தன் நீண்ட நாள் வருத்தத்தை கூறினார் யுவராஜ் சிங்.