அரையிறுதியில் இந்தியா தோல்வி
கடந்த ஜூன் மாதத்தில் மான்செஸ்டரில் நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா விளையாடிய உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
சர்வதேச போட்டிகளை தவிர்க்கும் தோனி
இந்தியா கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் நிலவி வந்தது. இந்நிலையில் பல போட்டிகளை கடந்து அரையிறுதி வரை வந்த இந்திய அணியினர் நியூசிலாந்திடம் சொற்ப ரன்களில் தோல்வி அடைந்தனர். இந்த தோல்வியை அடுத்து சர்வதேச போட்டிகளை விளையாடுவதில் இருந்து முன்னாள் கேப்டன் தோனி விலகியுள்ளார்.
முன்னாள் வீரர் யுவராஜ் சிங் குற்றச்சாட்டு
இந்நிலையில், உலக கோப்பையில் இந்திய அணி தோல்வியை சந்திக்க தாறுமாறான நிர்வாகமே காரணம் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
தவறான இடங்களில் வீரர்கள்
தவறான இடங்களில் அனுபவமற்ற வீரர்கள் களமிறக்கப்பட்டது தான் இந்தியாவின் உலக கோப்பை தோல்விக்கு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டுள்ள யுவராஜ் சிங், அணி நிர்வாகத்தின் இந்த தாறுமாறான போக்கால் கோப்பை நம் கையை விட்டு நழுவியதாகவும் தெரிவித்தார்.
அனுபவமற்ற விஜய் சங்கர், ரிஷப் பந்த்
அம்பத்தி ராயுடுவிற்கு உலக கோப்பை தொடரில் வாய்ப்பளிக்காமல், ஐந்து ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்த விஜய் சங்கர், ரிஷப் பந்த் போன்றவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதை யுவராஜ் சிங் சுட்டிக் காட்டினார்.
பெரிய போட்டிகள்
அனுபவமற்ற விஜய் சங்கர், ரிஷப் பந்த் போன்ற வீரர்களை உலக கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் களமிறக்கி அவர்களிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை எப்படி எதிர்பார்க்க முடியும் என்றும் யுவராஜ் சிங் கேள்வி எழுப்பினார்.
இந்தியாவின் தோல்வி
அரையிறுதியில் திடீரென களமிறக்கப்பட்ட அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்தி போன்ற வீரர்கள், 7வது வீரராக களமிறக்கப்பட்ட முன்னாள் கேப்டன் தோனி, போன்ற பல விஷயங்கள் குறித்து சுட்டிக்காட்டிய யுவராஜ் சிங், உலக கோப்பையின் அரையிறுதியில் இத்தகைய தாறுமாறான நடவடிக்கைகளை மேற்கொண்ட நிர்வாகத்தால்தான் இந்தியா தோல்வி கண்டதாகவும் குற்றம் சாட்டினார்.
ராயுடு விவகாரம் -யுவராஜ் வருத்தம்
நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் 4வது இடத்தில் சரியாக பொருந்திய அம்பத்தி ராயுடுவை இந்திய அணி நிர்வாகம் நடத்திய விதம் தனக்கு மிகுந்த வருத்தம் அளித்ததாகவும் யுவராஜ் குறிப்பிட்டார்.