உலகக்கோப்பை தோல்வி
இந்திய அணி 2019 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் தொடரில் இருந்து வெளியேறியது. அது குறித்து சமீபத்தில் ஆஜ் தக் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார் யுவராஜ் சிங்.
2003 உலகக்கோப்பை உதாரணம்
ஒரு அணியில் சிறந்த திறமையாளரை அடையாளம் கண்டு அவரை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும். உதாரணத்திற்கு 2003 உலகக்கோப்பையில் என்னையும், முகமது கைஃப்-யும் எடுத்துக் கொள்ளலாம். நியூசிலாந்து தொடரில் அனைவரும் மோசமாக செயல்பட்டோம். ஆனால், அதே அணி தான் 2003 உலகக்கோப்பையில் பங்கேற்றது என்றார்.
நான்காம் வரிசை லிஸ்ட்
அடுத்து நான்காம் வரிசை பேட்ஸ்மேன் விஷயத்தில் கோலி - ரவி சாஸ்திரி செய்த சொதப்பலை பற்றி பேசினார். அவர் கூறுகையில், 2003இல் இருந்து அப்படியே 2019 உலகக்கோப்பை அணிக்கு வருவோம். நான் அணியில் இருந்து நீக்கப்பட்டேன். மனிஷ் பாண்டே வந்தார்.
ராகுல், ரெய்னா முயற்சி
அதன் பின் அவர்கள் 1 - 2 வீரர்களை முயற்சி செய்தார்கள். அடுத்து கேஎல் ராகுல் முயற்சி செய்து பார்க்கப்பட்டார். சுரேஷ் ரெய்னா மீண்டும் அணிக்குள் வந்தார்.
ராயுடு, ஷங்கர் கதை
அடுத்து அம்பதி ராயுடுவை 8 - 9 மாதத்திற்கு அணியில் வைத்திருந்தார்கள். அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக 90 ரன்கள் குவித்தார். உலகக்கோப்பைக்கு முன் ஆஸ்திரேலியாவிடம் நாம் தோற்றோம். ராயுடு அந்த தொடரில் மோசமாக ஆடினார்.
அனுபவம் இல்லாத வீரர்கள்
அடுத்து விஜய் ஷங்கர் வந்தார். இங்கிலாந்தில் தேர்வாளர்கள் நான்காம் வரிசை வீரரின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு இருக்க வேண்டும். விஜய் ஷங்கர், ரிஷப் பண்ட்டுக்கு அந்த அளவு அனுபவம் இல்லை.
தினேஷ் கார்த்திக், பண்ட் நிலை
தினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்த வீரர். ஆனால், வெளியே உட்கார வைக்கப்பட்டார். திடீரென அவர் அரையிறுதியில் பேட்டிங் செய்தார். அதனால், இந்த சிந்தனையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
காரணம் இது தான்
உலகக்கோப்பையை இந்தியா வெல்லாமல் போனதற்கு இது தான் முக்கிய காரணம் என நான் நினைக்கிறேன். இந்தியா மற்றும் இங்கிலாந்து தான் சிறந்த அணிகள். இந்தியா இறுதிப் போட்டியில் விளையாடாமல் போவதற்கு எந்த காரணமும் இல்லை என்றார் யுவராஜ் சிங்.
தோனி சர்ச்சை
உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோனி ஏழாம் இடத்தில் பேட்டிங் செய்ய இறங்கியதும் பெரிய சர்ச்சை ஆனது. அது குறித்து பலரும் விமர்சித்த நிலையில், யுவராஜ் சிங்கும் விமர்சித்து இருக்கிறார்.
தோனி 7ஆம் இடத்தில் பேட்டிங்
தோனி ஏழாம் இடத்தில் பேட்டிங் செய்ததை கண்டு நான் வியப்படைந்தேன். அவர் அனுபவம் வாய்ந்தவர் என்பதால் இன்னும் மேலே பேட்டிங் செய்து இருக்கலாம் என்று எண்ணினேன். அணி நிர்வாகம் என்ன நினைத்தது என்று தெரியவில்லை. எப்படியோ அது முடிந்து விட்டது என்று கூறி முடித்தார் யுவராஜ் சிங்.