கடந்த ஆண்டில் ஓய்வு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த ஆண்டில் தனது ஓய்வை ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் அறிவித்தார். கடந்த 2011 உலக கோப்பை தொடரின் நாயகனாக விளங்கிய அவர், கடந்த 2017 முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடாத நிலையில் தன்னுடைய ஓய்வை அறிவித்தார். இந்திய அணிக்காக இவர் 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8701 ரன்களையும் 111 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
தன்னை உணர்ந்த தருணம்
இதேபோல இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளிலும் 58 சர்வதேச டி20 போட்டிகளிலும் யுவராஜ் சிங் விளையாடியுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பஞ்சாப் அணியின் சுப்மன் கில், அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங், அல்மோல்பிரீத் சிங் உள்ளிட்ட வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார் யுவராஜ் சிங். இதையடுத்து தன்னுடைய பேட்டிங் திறமை இன்னும் குறையவில்லை என்பதையும் தான் உணர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ரிடையர்ட் வீரர்கள் மட்டுமே ஆடமுடியும்
ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் தொடரில் பங்கேற்று யுவராஜ் சிங் விளையாடுவார் என்றும் அதற்கான அணியை தேர்ந்தெடுப்பதில் அவருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா உதவி வருவதாகவும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூறப்பட்டது. பிசிசிஐயை பொருத்தவரை ரிடையர்ட் ஆன வீரர்கள் மட்டுமே வெளிநாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியும். இந்நிலையில் தன்னுடைய ஓய்வை கேன்சல் செய்யுமாறு பிசிசிஐக்கு யுவராஜ் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
விளையாட, பயிற்சியளிக்க யுவராஜ் திட்டம்
பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் புனீத் பாலி தங்களின் அணியில் இணைந்து விளையாடவும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் யுவராஜ் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இதுகுறித்த முடிவெடுக்க தனக்கு 4 வாரங்கள் பிடித்ததாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். பிசிசிஐயிடம் இருந்து ஒப்புதல் கிடைத்தாலும் தான் டி20 போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.