ஹர்பஜன் முயற்சி செய்யவில்லை
பஞ்சாப் மாநில ரஞ்சி அணிக்கு மந்தீப் சிங் கேப்டனாக செயல்பட உள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அனுபவ வீரர்களும், இளம் வீரர்களும் கொண்ட இந்த அணியில் மூத்த வீரர்கள் ஹர்பஜன் மற்றும் யுவராஜ் இல்லை. ஹர்பஜனை பொறுத்தவரை அவர் இனி இந்திய அணியில் இடம் பெற முயற்சி செய்யவில்லை என தெரிகிறது.
ஹர்பஜன் சிங் ஒதுங்குகிறார்
ஐபிஎல் தொடரில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடுகிறார் ஹர்பஜன். அது தவிர்த்து, அவர் இந்தியா ஆடும் சர்வதேச போட்டிகளுக்கு வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இதனால், ஹர்பஜன் இனி மாநில கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியே இருப்பார் என தெரிகிறது.
இளம் வீரர்களுக்கு வழிவிட்டார்
யுவராஜ் சிங் இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்து 2019 உலகக்கோப்பையில் ஆடவேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார். சமீபத்தில் முடிந்த விஜய் ஹசாரே தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடினார். அது ஒருநாள் போட்டிகள் தொடர் என்பதால் அதில் யுவராஜ் ஆடி இருக்கிறார். ரஞ்சி ட்ராபி என்பது நான்கு நாள் டெஸ்ட் போட்டி என்பதால், யுவராஜ் இளம் வீரர்களுக்கு வழி விட்டு இனி ரஞ்சியில் ஆடமாட்டார் என கூறப்படுகிறது. யுவராஜ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் பல காலமாகவே வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார். அவரை ஒருநாள் போட்டிகள் வீரர் என்றே முத்திரை குத்தி வைத்திருந்தனர் என்பதும் நமக்கு நினைவிருக்கலாம்.
வாய்ப்பு மிக மிக குறைவு
எனவே, இனி யுவராஜ் சிங் ரஞ்சி தொடரில் ஆட மாட்டார் என்றே தெரிகிறது. அதே போல, அவர் 2019 உலகக்கோப்பை அணியில் இடம் பெறவும் தற்போதுள்ள சூழ்நிலையில் வாய்ப்புகள் மிக மிக குறைவே. இந்திய அணியில் இடம் பெற தன் கடைசி முயற்சியில் இருக்கும் யுவராஜ் சிங் தன் ஓய்வு முடிவை 2019இல் அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது.