2019 உலகக்கோப்பை அணித் தேர்வு
2019 உலகக்கோப்பை அணித் தேர்வு கடும் விமர்சனத்தை கிளப்பியது. அணியில் நான்காம் வரிசையில் ஆட சரியான பேட்ஸ்மேன் இல்லாத நிலையில் ராகுல் அந்த இடத்தில் ஆட தேர்வு செய்யப்பட்டார். ஆனால், உலகக்கோப்பை தொடரில் மேலும் பல குழப்பங்கள் நடந்தன.
விஜய் ஷங்கர் தேர்வு
தவான் காயம் அடைந்ததால், ராகுல் துவக்க வீரராக மாறினார். அனுபவம் குறைந்த விஜய் ஷங்கர் நான்காம் வரிசையில் ஆட தேர்வு செய்யப்பட்டார். அது சரியாக அமையவில்லை. அவர் ரன் குவிக்க திணறினார். அதனால், இந்திய அணி கடும் விமர்சனத்தை சந்தித்து வந்தது,
உள்ளே வந்த ரிஷப் பண்ட்
இதை அடுத்து விஜய் ஷங்கர் நீக்கப்பட்டு, மற்றொரு அனுபவம் குறைந்த வீரரான ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். ரிஷப் பண்ட் உலகக்கோப்பை தொடரில் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. எனினும், வேறு வழியின்றி தொடர்ந்து அணியில் இடம் பெற்றார்.
அரை இறுதியில் பண்ட்
அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆடிய ரிஷப் பண்ட் சொதப்பினார். இந்திய அணி 24 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இருந்தது. அப்போது களமிறங்கி 32 ரன்கள் அடித்த அவர் மோசமான ஷாட் ஆடி கேட்ச் கொடுத்தார்.
கோபம் அடைந்த கோலி
பண்ட் அவுட் ஆன விதத்தை பார்த்த கேப்டன் கோலி அப்போது அருகே இருந்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கோபமாக பேசிய காட்சி அப்போது வைரல் ஆனது. ரிஷப் பண்ட் பொறுப்பில்லாமல் மோசமான ஷாட் ஆடியதை தான் அவர் விமர்சித்தார் என செய்திகள் வெளியாகின. பண்ட் மீது விமர்சனம் எழுந்தது.
யுவராஜ் சிங் என்ன சொன்னார்?
இந்த நிலையில், சமீபத்தில் கெவின் பீட்டர்சன் உடனான இன்ஸ்டாகிராம் உரையாடலில் யுவராஜ் சிங் பண்ட்டுக்கு ஆதரவாக பேசி உள்ளார். மேலும், இந்திய அணியின் அணித் தேர்வை விமர்சித்து பேசி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் ஆடியதை வைத்து பண்ட்டை தேர்வு செய்தது தான் இந்திய அணியின் சறுக்கலுக்கு காரணம் என கூறி உள்ளார்.
அனுபவம் இல்லை
"ரிஷப் பண்ட் தன் ஐந்தாவது போட்டியில் தான் ஆடுகிறார். அவர் அந்த ஷாட் ஆடியதை யாரும் விரும்பவில்லை. ஆனால், அவர் தன் ஐந்தாவது போட்டியில் தான் ஆடுகிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெரிய தொடரில் ஆடும் முன் அனுபவம் வேண்டும்" என்றார் யுவராஜ் சிங்.
ஐபிஎல் மட்டும் போதுமா?
"2019 உலகக்கோப்பை தொடருக்கு சரியாக திட்டமிடவில்லை. 20 ஓவர் கொண்ட ஐபிஎல் தொடரில் ஆடும் போது பெரிய ஷாட் ஆட எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால், 50 ஓவர் போட்டியில் அனைத்து பந்துகளையும் அடித்து ஆட முடியாது." என்றார்
மனநிலை வேறு
"ஐபிஎல் தொடர் 50 ஓவர் தொடராக இருந்து, அதில் பண்ட் மூன்று தொடர்களில் ஆடிய அனுபவம் பெற்று இருந்தால் அது வேறு மாதிரி இருக்கும். 50 ஓவர் ஆடும் போது மனநிலை வேறு மாதிரி இருக்கும்" என்றார் யுவராஜ் சிங்.