Recommended Video
யுவராஜ் சிங் விமர்சனம்
யுவராஜ் சிங் கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தது முதல் பிசிசிஐ மற்றும் இந்திய அணியை வெளிப்படையாக விமர்சனம் செய்து வருகிறார். எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் அவர் செய்யும் விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
அணியின் அணுகுமுறை
இந்த நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்திய அணியின் பயிற்சி அணுகுமுறை குறித்து விமர்சனம் செய்துள்ளார். தற்போது இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரை குறி வைத்து தாக்கி உள்ளார்.
மன நல மருத்துவர் தேவை
தற்போது உள்ள அணியில் வீரர்களின் மனநலன் பற்றி பேச ஆளே இல்லை என கூறி உள்ளார் யுவராஜ் சிங். ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஹர்திக் பண்டியா உள்ளிட்ட இளம் வீரர்களிடம் பேசி அவர்களை பக்குவப்படுத்த வேண்டும். அதற்கு ஒரு மன நல மருத்துவர் அணியில் இருக்க வேண்டும் என கூறி உள்ளார் யுவராஜ் சிங்.
ரவி சாஸ்திரி எப்படி
ரவி சாஸ்திரி பற்றி பேசுகையில், அவரின் கீழ் இந்திய அணி சிறப்பாக ஆடி உள்ளது. ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஒரு பயிற்சியாளராக அவர் எப்படி என எனக்கு தெரியவில்லை. அவரின் கீழ் நான் அதிகம் விளையாடியதில்லை என்றார் யுவராஜ் சிங்.
இப்படி செய்ய முடியாது
ஆனால், அவரின் பயிற்சி அணுகுமுறையை கடுமையாக விமர்சனம் செய்தார். அனைத்து வீரர்களையும் ஒரே முறையில் ஆட வைக்க முடியாது. ஒவ்வொரு வீரருக்கும் வேறு வேறு அணுகுமுறையை கையாள வேண்டும். அதை நான் இப்போது உள்ள பயிற்சியாளர் குழுவில் காணவில்லை என கூறினார் யுவராஜ் சிங்.
சேவாக் - புஜாரா உதாரணம்
அதற்கு ஒரு உதாரணமும் கூறினார் யுவராஜ். "உங்கள் விருப்பப்படி ஆடுங்கள். உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்" என்ற அணுகுமுறை சேவாக் போன்ற வீரருக்கு சரியாக இருக்கும். ஆனால், புஜாராவுக்கு அது சரியாக வராது. இதையெல்லாம் பயிற்சியாளர்கள் உணர வேண்டும் என்றார் யுவராஜ் சிங்.
விக்ரம் ரத்தோர் பற்றி விமர்சனம்
பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் பற்றி பேசிய யுவராஜ் சிங், அவர் தன் சீனியர் வீரர் தான். ஆனாலும், அவர் அதிக சர்வதேச போட்டிகளில் ஆடாத நிலையில் எப்படி இப்போது உள்ள இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும்? அவரால் சில டெக்னிக்குகளை சொல்லித் தர முடியும். ஆனால் அவர்களின் மன நிலைக்கு ஏற்ப பயிற்சி அளிக்க முடியாது என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் யுவராஜ் சிங்.
நான் என்ன செய்வேன்..
நான் பயிற்சியாளராக இருந்தால் பும்ராவுக்கு 9 மணிக்கே குட்நைட் சொல்லி விடுவேன். ஆனால், ஹர்திக் பண்டியாவை 10 மணிக்கு "ட்ரிங்க்" சாப்பிட அழைத்துச் செல்வேன். இப்படித் தான் அணியில் உள்ள பல்வேறு வீரர்களை நாம் மாறுபட்டு அணுக வேண்டும் என கூறினார் யுவராஜ் சிங்.