2011 உலகக்கோப்பை நாயகன்
இந்திய அணியில் சிறந்த பினிஷராக வலம் வந்தார் யுவராஜ் சிங். 2011 உலகக்கோப்பை தொடரை இந்தியா வென்றதில் யுவராஜ் சிங்கிற்கு பெரும் பங்கு உள்ளது. பல போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்
சிக்ஸர் மன்னனான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர் அடித்த மிகச் சிலரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2007 டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக யுவராஜ் சிங் அந்த சாதனையை நிகழ்த்தினார்.
அணியில் வாய்ப்பு இல்லை
கடந்த 2017ஆம் ஆண்டிற்கு பின் யுவராஜ் சிங்கிற்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2019 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஆட அவர் ஆசைப்பட்டாலும் அது நடக்கவில்லை. இந்த நிலையில், அவர் உலகக்கோப்பை தொடர் நடந்து வந்த போதே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
டி20 தொடர்கள்
தற்போது உலகின் பல்வேறு நாடுகளின் டி20 தொடரில் ஆடி வருகிறார். டி10 கிரிக்கெட் தொடரில் கூட அவர் பங்கேற்றார். தற்போது ஓய்வில் இருக்கும் யுவராஜ் சிங் ஸ்போர்ட்ஸ்ஸ்டார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கடினமான பந்துவீச்சாளர் யார்?
அதில் கடினமான பந்துவீச்சாளர் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பதில் அளித்த யுவராஜ் சிங், முத்தையா முரளிதரனை தான் குறிப்பிட்டார். மற்றொரு பந்துவீச்சாளராக கிளென் மெக்கிராத்தை குறிப்பிட்டார். இவர்களிடம் இருந்து தப்பிய விதத்தையும் கூறி உள்ளார்.
என்ன செய்வது என்றே தெரியவில்லை
"நான் முத்தையா முரளிதரன் பந்துவீச்சில் போராடினேன். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கிளென் மெக்கிராத் வெளியே நகர்ந்து செல்லும் பந்துகளால் எனக்கு தொல்லை கொடுத்தார்." என இந்த இரண்டு பந்துவீச்சாளர்களால் தான் சந்தித்த பிரச்சனையை கூறினார்.
நல்ல வேளை நான் ஆடவில்லை
"நல்ல வேளையாக நான் டெஸ்ட் போட்டிகளில் மெக்கிராத்திற்கு எதிராக அதிகம் விளையாடவில்லை. நான் வெளியே அமர்ந்து, மூத்த வீரர்களுக்கு கை தட்டி உற்சாகப்படுத்தி வந்தேன்." என தான் மெக்கிராத் பந்துவீச்சில் தப்பியதை பற்றி கூறினார்.
சச்சின் சொன்ன யோசனை
அடுத்து முத்தையா முரளிதரன் பந்துவீச்சில் அடித்த ஆட சச்சின் சொன்ன யோசனை பற்றி பேசினார். "சச்சின், முரளிதரன் பந்துவீச்சில் ஸ்வீப் செய்து ஆடுமாறு கூறினார். அதன் பின் எனக்கு அவரது பந்துவீச்சை சந்திக்க எளிதாக இருந்தது" என்றார்.
சிறந்த கேப்டன் யார்?
இதே பேட்டியில் சிறந்த கேப்டன் குறித்த கேள்விக்கு, பதில் அளித்த யுவராஜ் சிங், கங்குலி தனக்கு ஆதரவு அளித்த அளவுக்கு பிற கேப்டன்களான தோனி, விராட் கோலி ஆதரவு அளிக்கவில்லை என கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
காரணம் என்ன?
பிற கேப்டன்களான தோனி, விராட் கோலி ஆகியோர் தலைமையில் ஆடிய போது யுவராஜ் சிங் பல முறை பார்ம் அவுட் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதைத் தான் அவர் குறிப்பிட்டு, கங்குலி அளவுக்கு அவர்கள் ஆதரிக்கவில்லை என கூறி உள்ளார்.