கங்குலி கேப்டன்சி
இந்திய அணியில் சௌரவ் கங்குலி கேப்டனாக பதவி ஏற்ற போது இந்திய அணி மோசமான நிலையில் இருந்தது. இளம் வீரர்களின் தேவையை உணர்ந்த கங்குலி தானே களத்தில் குதித்து அண்டர் 19 அணி, உள்ளூர் மாநில அணிகளில் இருந்து வீரர்களை தேர்வு செய்தார்.
கங்குலி கண்ட நட்சத்திர வீரர்கள்
அப்படி அவர் கண்டுபிடித்த நட்சத்திர வீரர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இந்திய கிரிக்கெட் அணியை மற்ற நாடுகள் மதிக்கவும், கண்டு அஞ்சவும் செய்தது அப்போது தான். ஹர்பஜன் சிங், சேவாக், யுவராஜ் சிங், முகமது கைப், ஜாகிர் கான் அவர்களில் சிலர்.
அதிரடி வீரர் யுவராஜ்
யுவராஜ் சிங் தான் அணியில் அறிமுகம் ஆனது முதல் அதிரடி வீரர் என்ற அடையாளத்தை பெற்றார். பல போட்டிகளில் மிடில் ஆர்டரில் இறங்கி போட்டியை வெற்றிகரமாக மாற்றினார். ஆனால், இடையிடையே பலமுறை அவர் பார்ம் அவுட் ஆகி உள்ளார்.
அதிரடி ஆட்டம் காரணமாக..
அதிரடி ஆட்டம் ஆட வேண்டியதால் பலமுறை ரன் குவிக்கும் முன்பே யுவராஜ் சிங் அவுட் ஆகி பார்ம் இழந்தார். அந்த சந்தர்ப்பங்களில் அவருக்கு ஆதரவு அளித்து அணியில் தொடரச் செய்தார் அப்போதைய கேப்டன் சௌரவ் கங்குலி.
தோனி கேப்டன்சியில்..
கங்குலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் யுவராஜ் சிங் அணியில் இருந்து நீக்கப்படுவதும், சேர்க்கப்படுவதுமாக இருந்தார். தோனி கேப்டன்சியில் யுவராஜ் சிங் 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வென்ற அணியில் சிறப்பாக ஆடி இருந்தார். எனினும், அவ்வப்போது பார்ம் அவுட் காரணமாக நீக்கப்பட்டு, பின் சேர்க்கப்பட்டார்.
விராட் கோலி கேப்டன்சியில்..
அதன் பின் விராட் கோலி கேப்டன்சியில் சில போட்டிகளில் ஆடிய யுவராஜ் சிங் அணியில் இருந்து பார்ம் அவுட் காரணமாக நீக்கப்பட்டார். பின் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் யுவராஜ் சிங்.
யார் சிறந்த கேப்டன்?
இந்த நிலையில், யுவராஜ் சிங்கிடம் ஸ்போர்ட்ஸ்ஸ்டார் பத்திரிக்கை அவர் ஆடியதில் யார் சிறந்த கேப்டன் என கேள்வி கேட்டு இருந்தது. அதற்கு பதில் அளித்த யுவராஜ் சிங், கங்குலி அளவுக்கு தோனி, விராட் கோலி தன்னை ஆதரிக்கவில்லை என வெளிப்படையாக கூறினார்.
அது கடினம்
யுவராஜ் சிங் கூறுகையில், "நான் கங்குலியின் கீழ் ஆடி இருக்கிறேன். அவர் எனக்கு அதிக ஆதரவு அளித்தார். அதன் பின் தோனி கேப்டனாக வந்தார். சௌரவ், தோனி இடையே யார் சிறந்தவர் என முடிவு செய்வது கடினம்." என்றார்.
அந்த ஞாபகங்கள்
மேலும், "ஆனால், கங்குலியின் கீழ் ஆடிய ஞாபகங்கள் தான் எனக்கு அதிகம். அதற்கு காரணம், அவர் எனக்கு அளித்த ஆதரவு. அந்த அளவு ஆதரவை தோனி மற்றும் விராட் கோலி எனக்கு அளிக்கவில்லை" என உண்மையை உடைத்துக் கூறினார் யுவராஜ் சிங்.
கங்குலி தான் முதலில்..
யுவராஜ் சிங் ஓய்வுக்குப் பின் பல நாடுகளின் உள்ளூர் டி20 தொடர்களில் ஆடி வருகிறார். தோனியுடன் நல்ல நட்பு இருந்தாலும், தன் ஓய்வுக்குப் பின்னும் கங்குலியை உச்சத்தில் தான் வைத்துள்ளார் யுவராஜ் சிங்.