கொரோனா வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் உலகம் ஸ்தம்பித்து போய் உள்ளது. எந்த சர்வதேச போட்டியும் உலகம் முழுவதும் நடைபெறவில்லை. ஐபிஎல் தொடர் கூட தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடைபெறுமா? என்பதும் தெரியவில்லை.
ஐபிஎல் என்ன செய்கிறது?
இந்த நிலையில், யுவராஜ் சிங் ஐபிஎல் தொடரில் கிடைக்கும் பணத்தால் இளம் வீரர்கள் கவனம் சிதறுவதாக கூறி உள்ளார். 2008இல் பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் வந்த பின் சில இளம் வீரர்கள் உள்ளூர் தொடர்களான ரஞ்சி ட்ராபி ஆகியவற்றில் ஆடுவதைக் காட்டிலும் ஐபிஎல் தொடரில் ஆடுவதையே பெரிதாக கருதி வருகின்றனர்.
நிறைய பணம்
அது குறித்து பேசிய யுவராஜ் சிங், "ஐபிஎல் நிறைய பணம் அளிக்கிறது. அது இளம் வீரர்களின் கவனத்தை மாற்றி விடுகிறது. இப்போது உள்ள வீரர்கள் இல்லை. அவர்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புகிறார்கள்." என கூறினார்.
உள்ளூர் தொடரில் ஆட விரும்பவில்லை
மேலும், "ஆனால், ஒருநாள் போட்டிகளில் ஆடும் இளம் வீரர்களின் கவனம் முழுவதும் ஐபிஎல்-இல் தான் உள்ளது. அவர்கள் தங்கள் மாநிலங்களுக்காக உள்ளூர் தொடரில் ஆட விரும்பவில்லை" எனவும் யுவராஜ் சிங் கூறினார். அடுத்து மூத்த வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் விதம் பற்றியும் பேசினார்.
மரியாதை இல்லை
"இளம் வீரர்களுடன் பேசிய வரையில் அவர்கள் மூத்த வீரர்களுக்கு இன்னும் மரியாதை அளிக்கலாம் என தோன்றுகிறது. நாங்கள் எங்கள் மூத்த வீரர்களுக்கு அளித்தது போல அவர்கள் மரியாதை அளிக்கவில்லை" என சாடினார் யுவராஜ் சிங்.
அவர்கள் கற்றுத் தந்தவர்கள்
மேலும், "மூத்த வீரர்களுக்கு குறிப்பிட்ட அளவு மரியாதை அளிக்க வேண்டும். அவர்கள் நமக்கு நிறைய கற்றுத் தந்தவர்கள்" என யுவராஜ் சிங் இளம் வீரர்கள் தவறை சுட்டிக் காட்டினார். இதே போன்ற விமர்சனத்தை முன்பு சுனில் கவாஸ்கர் போன்றோரும் முன் வைத்துள்ளனர்.
யுவராஜ் சிங் ஐபிஎல் ஆடுவாரா?
யுவராஜ் சிங் தற்போது சர்வதேச தொடரில் ஓய்வு பெற்று பிற நாட்டு டி20 தொடர்களில் ஆடி வருகிறார். கடந்த ஆண்டு குளோபல் டி20 மற்றும் டி10 லீக் ஆகிய தொடர்களில் பங்கேற்றார். அதனால் விதிப்படி அவரால் ஐபிஎல் தொடரில் ஆட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.