உலகக்கோப்பை தோல்வி
இந்திய அணி 2019 உலகக்கோப்பை தொடரை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது. ஆனால், உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. அப்போதே கேப்டன் கோலி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.
கேப்டன்சி மாற்றம்
ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டார் என்பதால் அவரை டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு கேப்டனாக நியமித்து வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பலரும் கூறி வந்தனர். ஆனால், பிசிசிஐ மௌனம் காத்து வந்தது.
கோலி பிடிவாதம்
உலகக்கோப்பைக்கு பின் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பார் என்றும், கோலி ஓய்வில் இருப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால், கோலி ஓய்வே வேண்டாம் என அந்த தொடர் முழுவதும் கேப்டனாக செயல்பட்டார்.
வேலைப் பளு அதிகம்
தற்போது யுவராஜ் சிங் கேப்டனை மாற்ற வேண்டும் என மீண்டும் கொளுத்திப் போட்டு இருக்கிறார். இதற்கு அவர் சொல்லும் காரணம், கோலிக்கு வேலைப் பளு அதிகம் என்பது தான்.
மற்ற அணிகளில் எப்படி?
இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற மற்ற அணிகளில் டெஸ்ட் அணிக்கும், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கும் தனித்தனி கேப்டன்கள் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்கு மட்டும் தனி கேப்டன் இருக்கிறார். ஆனால், இந்திய அணியில் விராட் கோலி தான் மூன்று அணிகளுக்கும் கேப்டனாக உள்ளார்.
யுவராஜ் சிங் என்ன சொன்னார்?
இது பற்றி பேசிய யுவராஜ் சிங், "முன்பு இரண்டு வித கிரிக்கெட் போட்டிகள் தான் இருந்தன. அது கேப்டனுக்கு கையாள எளிதாக இருந்தது. ஆனால், இப்போது மூன்று வித கிரிக்கெட் போட்டிகள் உள்ளன" என்றார்.
ரோஹித் பெயரை சொன்னார்
விராட் கோலிக்கு வேலைப் பளு அதிகமாக இருந்தால், வேறு யாரையேனும் குறைந்த ஓவர் போட்டிகளுக்கு கேப்டனாக முயற்சி செய்யலாம். ரோஹித் மிகவும் வெற்றிகரமாக இருக்கிறார்" என்று குண்டை தூக்கிப் போட்டார் யுவராஜ் சிங்.
உஷார் பேச்சு
கோலியை ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பதவியில் இருந்து மாற்றலாம் எனக் கூறிய யுவராஜ் அடுத்து அப்படியே, அது எல்லாமே அணி நிர்வாகம் கையில் தான் உள்ளது அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என உஷாராக பேசி தான் இதை வலியுறுத்தவில்லை என்பது போல காட்டிக் கொண்டார்.
ரோஹித் சர்மா கேப்டன்சி
ரோஹித் சர்மாவை பலரும் அடுத்த கேப்டனாக முன் மொழிய முக்கிய காரணம், ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ்-ஐ நான்கு முறை கோப்பை வெல்ல வைத்துள்ளார். மேலும், ஆசிய கோப்பை. நிதாஸ் ட்ராபி உள்ளிட்ட தொடர்களில் இந்திய அணியை வழிநடத்தி கோப்பை வெல்ல வைத்துள்ளார் என்பது தான்.
கோலிக்கு சிக்கல்
எல்லோரும் மறந்து போயிருந்த விஷயத்தை மீண்டும் நினைவு படுத்தி, கொளுத்திப் போட்டுள்ளார் யுவராஜ் சிங். இனி அடுத்து பல முன்னாள் வீரர்களும் இதே கருத்தை முன் வைத்தால் பிசிசிஐக்கு அழுத்தம் ஏற்படும். கோலிக்கு அது சிக்கலாக சென்று முடியும்.