வேட்கையுடன் இங்கிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்றுக் கொண்டிருக்கிறது. நாட்டிங்கமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், ஏறக்குறை வெற்றிக்கு அருகில் சென்றுவிட்ட இந்திய அணி, கடைசி நாளில் பெய்த மழை காரணமாக வெற்றிப் பெறும் அபார வாய்ப்பை இழந்தது. ஆனால், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி,151 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றிப் பெற்றது. 2வது டெஸ்ட் போட்டியில், நான்காவது நாள் வரை இங்கிலாந்து தான் ஆதிக்கம் செலுத்தியது. அவர்கள் பும்ராவை டார்கெட் செய்வதற்கு முன்பு வரை, ஆட்டம் இங்கிலாந்து கண்ட்ரோலில் தான் இருந்தது. அதன் பிறகு தான் அனைத்தும் மாறியது. பும்ரா - ஷமி இணை 9வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, இந்தியா மீண்டு வந்தது. பிறகு, இங்கிலாந்தை 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி வெற்றிப் பெற்றது. இங்கிலாந்து ஊடகங்கள் அந்த அணியை கடுமையாக விமர்சிக்க, 3வது டெஸ்ட் போட்டியில் வென்றே தீர வேண்டும் என்று வேட்கையுடன் களமிறங்கியது இங்கிலாந்து.
2 மாற்றங்கள்
இதன் பிறகு, ஹெட்டிங்லேவில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியை முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு சுருட்டியது இங்கிலாந்து. அந்த இடத்திலேயே போட்டியை இழந்துவிட்டது இந்தியா. அதன் பிறகு எவ்வளவோ போராடியும், இந்திய அணியால் மீண்டு வர முடியவில்லை. முடிவில், இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த சூழலில் தான் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை (செப்.2) லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் 2 மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏறக்குறை உறுதி என்றே கூறலாம்.
மீண்டும் வாய்ப்பு
தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இந்திய அணியின் 11 வீரர்கள் கொண்ட பட்டியலில், லோகேஷ் ராகுல், ரோஹித் ஷர்மா, விராட் கோலி (c) , புஜாரா, அஜின்க்யா ரஹானே (wc), ரிஷப் பண்ட் (wk), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், பும்ரா ஆகிய வீரர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், புஜாரா மற்றும் ரஹானே ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இருவருமே, இந்த டெஸ்ட் தொடரில், தொடர்ந்து சொதப்பி வந்தனர். எனினும், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் கடுமையாக போராடி 45 ரன்கள் அடித்த புஜாரா, மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் 91 ரன்கள் அடித்து நம்பிக்கை அளித்தார்.
ஜாகீர் கான்
அதேசமயம், ரஹானே லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் அரைசதம் அடித்திருந்தாலும், மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் மிகச் சாதாரணமாக தனது விக்கெட்டை இழந்தார். இதனால், ரஹானேவுக்கு பதில் ஹனுமா விஹாரி அல்லது சூர்யகுமார் யாதவ்வை அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. எனினும், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத கேப்டன் கோலி மீண்டும் இருவருக்கும் வாய்ப்பு அளித்துள்ளார் என்றே தெரிகிறது. இந்நிலையில், புஜாரா மற்றும் ரஹானே குறித்து முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
வழி கண்டறிந்த புஜாரா
இதுகுறித்து cricbuzzக்கு அவர் அளித்த பேட்டியில், "புஜாரா கடுமையான அழுத்தத்தில் இருந்தார், ஆனால் அவர் அதிலிருந்து வெளியேற ஒரு வழியைக் கண்டுபிடித்து விட்டார். அவர் வித்தியாசமாக சில விஷயங்களை முயற்சி செய்தார், அதில் அவர் நல்ல முடிவுகளையும் பெற்றார். ரஹானேவால் அதைச் செய்ய முடியவில்லை. இந்த விஷயங்கள் பகுப்பாய்வு செய்யப்படும் ஒரு கட்டத்தில் இந்தத் தொடர் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். இதனால், நீங்கள் விரைவில் ஒரு மாற்றத்தைக் காண முடியும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
விரைவில் மாற்றம்?
இந்த தொடரில் மோசமாக விளையாடியதால், புஜாரா மற்றும் ரஹானே என இருவருமே அணியில் இருந்து நீக்கப்படவிருந்தனர். அதில் ஒருவர் தப்பித்து சென்றுவிட்டார். ஆனால், ரஹானே இன்னும் தன் இடத்தை பாதுகாப்பாக உணரவில்லை. நீங்கள் தொடர்ந்து அணியில் விளையாட வேண்டுமெனில், கடந்த கால சாதனைகளை கொண்டு நீடிக்க முடியாது. எப்போதுமே உங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவர வேண்டும். நீங்கள் உங்கள் ஆட்டத்தைப் பற்றி மட்டும் சிந்திக்காமல், ஒரு வலுவான நடுத்தர வரிசை பேட்ஸ்மேனாக இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். எனவே, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு முன்னேறுகிறீர்களோ, அந்த அளவிற்கு உங்கள் மீதான எதிர்பார்ப்புகளும் உயரும்" என்று அவர் கூறியுள்ளார்.