பணத்தை செட்டில் பண்ணுங்க
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ஹீத் ஸ்ட்ரீக், தனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை கொடுக்க வேண்டும் என நீதிமன்றத்தை அணுகி உள்ளார். ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டை கலைத்து அதன் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து கடன்களை அடைக்குமாறு நீதிமன்றத்தில் கோரியுள்ளார் ஹீத் ஸ்ட்ரீக்.
ஐசிசி கொடுத்த பணம் எங்கே?
ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகத்திற்கு ஐசிசி பல வகைகளில் நிதி உதவி செய்துள்ளது. அதையெல்லாம் சரியாக கையாளாமல் வீணாக்கி விட்டது எனவும் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார் ஹீத் ஸ்ட்ரீக்.
ஹீத் ஸ்ட்ரீக் கோபம் ஏன்?
ஹீத் ஸ்ட்ரீக் கடந்த சில மாதங்களுக்கு முன், ஜிம்பாப்வே அணி தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் அணியை உலகக்கோப்பைக்கு தகுதி பெற வைக்கவில்லை என்று காரணம் கூறப்பட்டது. அப்போதிருந்து ஹீத் ஸ்ட்ரீக் ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டை கடுமையாக எதிர்த்து வருகிறார்.
சம்பள பாக்கி எவ்வளவு?
ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டு ஹீத் ஸ்ட்ரீக்கிற்கு சுமார் 92 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு சம்பள பாக்கி வைத்துள்ளது. அதே போல பேட்டிங் பயிற்சியாளராக இருந்த லான்ஸ் க்ளுஸ்னருக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு சம்பள பாக்கி வைத்துள்ளது என்ற தகவலும் தெரிய வந்துள்ளது.