பாகிஸ்தான் கிரிக்கெட் அவல நிலை
ஹைதர் அந்த தொடரில் ஒரே போட்டியில் ஆடியதோடு, சொல்லாமல் கொள்ளாமல் அணியை விட்டு லண்டன் சென்று விட்டார். அதற்கும் அக்மல் மிரட்டல் தான் காரணம் என கூறி உள்ளார். இது பற்றிய மேலும் சில தகவல்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் மோசமான நிலையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
2010 கிரிக்கெட் தொடர்
2010 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் ஆடியது பாகிஸ்தான் அணி. அந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அந்த தொடரில் தான் மர்மமான முறையில் ஹைதர் காணாமல் போனார். அந்த தொடரில் நான்கு போட்டிகளில் அடிய நிலையில் அவர் பாதியில் காணாமல் போனார்.
கம்ரான் அக்மலுக்கு பதில் ஆடிய ஹைதர்
அதற்கு முன்னதாக உமர் அக்மலின் சகோதரர் கம்ரான் அக்மலுக்கு மாற்றாக டெஸ்ட் அணியில் இணைந்து, இங்கிலாந்து மண்ணில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடினார். அதில் 88 ரன்கள் அடித்து இருந்தார். அதனால், அவருக்கு தொடர் வாய்ப்பு கிடைக்கும் நிலையும் இருந்தது.
உமர் அக்மல் மிரட்டல்
இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹைதரை மூன்றாவது ஒருநாள் போட்டியில் சரியாக ஆடக் கூடாது என உமர் அக்மல் தன்னை எச்சரித்ததாகவும், அதை தான் ஒப்புக் கொள்ள மறுத்ததாகவும் கூறி உள்ளார் ஹைதர்.
மன அழுத்தம்
அதைத் தொடர்ந்து உமர் அக்மல் தன்னை மிரட்டியதாகவும், உமர் அக்மல் மட்டுமில்லாமல் வேறு சிலரும் தன்னை தொடர்பு கொண்டு ஒழுங்காக விளையாடக் கூடாது என மிரட்டியதாகவும் கூறினார் ஹைதர். அவர்களின் தொடர் மிரட்டலால் தான் மனதளவில் அழுத்தத்துக்கு உள்ளானதாகவும் கூறியுள்ளார்.
தப்பி ஓடிய ஹைதர்
அதன் பின்னர் தான் அவர் லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ளார். அது குறித்து அணி நிர்வாகத்துக்கு அவர் எந்த தகவலும் கூறவில்லை. பல மாதங்கள் அவர் லண்டனில் தான் இருந்தார். பின்னர் உள்துறை அமைச்சரின் ஆதரவுடன் பாகிஸ்தான் திரும்பினார்.
கிரிக்கெட் வாழ்வு முடிந்தது
ஆனால், அவரால் மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம்பெற முடியவில்லை. அவரது கிரிக்கெட் வாழ்வு அத்துடன் முடிந்தது. அந்த சம்பவங்கள் எல்லாவற்றுக்கும் உமர் அக்மல் தான் காரணம் என இப்போது புகார் கூறி உள்ளார் ஹைதர்.
பாகிஸ்தான் மேனேஜர் என்ன சொன்னார்?
இந்த சம்பவம் பற்றி அப்போதைய பாகிஸ்தான் அணி மேலாளர் இந்திகாப் ஆலம் கூறுகையில், மனநல பாதிப்பால் ஹைதர் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறியதும் குறிப்பிடத்தக்கது. அப்போது உமர் அக்மல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தற்போது அவர் வேறு விவகாரத்தில் சிக்கி உள்ளார்.
உமர் அக்மல் தடை
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்கு முன் தன்னை மேட்ச் பிக்ஸிங் செய்ய சிலர் அணுகியதை உமர் அக்மல் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு தெரிவிக்காததால் அவரை மூன்று ஆண்டுகள் தடை செய்துள்ளனர். இந்த தடை போதாது என கூறி உள்ளார் ஹைதர்.
கேலிக் கூத்து
ஹைதர் விவகாரத்திலேயே உமர் அக்மல் மீது விசாரனை மற்றும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, இப்போது உமர் அக்மலை தடை செய்துள்ளது ஒருபுறம் என்றால் ஹைதர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பாகிஸ்தான் அணி மேனேஜர் கூறி இருப்பது பெரும் கேலிக் கூத்தாக அமைந்துள்ளது.