முன்னாள் சாம்பியன் உருகுவேயிடம் மிகக் கடுமையாக போராடி வீரத் தோல்வியைச் சந்தித்தது கானா.வாழ்ந்தாலும் நன்றாக வாழ வேண்டும், வீழ்ந்தாலும் நல்ல வீரனிடம் வீழ வேண்டும் என்ற பழமொழிக்கேற்ப நேற்று நடந்த போட்டியில் வலுவான உருகுவேக்கு மிகக் கடுமையான சிரமத்தைக் கொடுத்து விட்டுத்தான் தோல்வியைத் தழுவியது கானா.கானாவின் நேற்றைய போராட்ட ஆட்டம் ரசிகர்களை கவர்ந்திழுத்து விட்டது. ஆனால் கானாவின் தோல்வியின் மூலம் இந்த ஆட்டத் தொடரிலிருந்து ஆப்பிரிக்க கண்டமே வெளியேறியுள்ளது.நேற்று நடந்த 2வது காலிறுதிப் போட்டியில் 2 முறை உலக சாம்பியனான உருகுவேயை, 2வது முறையாக உலகக் கோப்பைப் போட்டித்தொடருக்கு தகுதி பெற்றிருந்த கானா சந்தித்தது.உருகுவேயின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும் என எதிர்பார்த்ததற்கு மேலாக உருகுவேக்கு கடுமையான ஃபைட் கொடுத்தது கானா. இதனால் ஆட்டம் படு விறுவிறுப்பாக அமைந்தது.உருகுவேயின் ஆட்டம் தொடக்கத்தில் அபாரமாக இருந்தது. போர்லானும், சுவாரஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 11வது நிமிடத்தில் சுவாரஸுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கானா கோல் கீப்பர் ரிச்சர்ட் கிங்சன் பந்தை அழகாக தடுத்து கோல் வாய்ப்பை மறுத்து விட்டார். இந்த கோலை கிங்சன் தடுத்த விதம் அபாரமானதாக இருந்தது.அதேபோல 18வது நிமிடத்தில், போர்லான் அடித்த கார்னர் பந்தையும் அழகாக தடுத்தார் கிங்சன். அடுத்த 7 நிமிடத்தில், சுவாரஸ் அடித்த பந்தையும் கோலாகமல் தடுத்து கானாவைக் காப்பாற்றினார் கிங்சன்.அதன் பிறகு கானா சுதாரிப்புடன் ஆடியது. முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் 45வது நிமிடத்தின்போது யாரும் எதிர்பாராத வகையில் அபாரமான கோலைப் போட்டது கானா. முன்டாரி அடித்த அந்த கோல் கானாவுக்கு எனர்ஜி பூஸ்டராக அமைந்தது.இதன் மூலம் முதல் பாதி ஆட்டத்தை 1-0 என்ற முன்னிலையுடன் கானா கையகப்படுத்தியது. ஆனால் 2வது பாதி ஆட்டத்தில் உருகுவே மேலும் சுதாரிப்புடன் ஆடியது. ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் டியகோ போர்லான் கானாவின் தடுப்புகளைத் தாண்டி அபாரமான கோலடித்து விட்டார். ஆட்ட நேர முடிவில் இருஅணிகளும் தலா ஒரு கோல் போட்டிருந்ததால் கூடுதல் நேரம் தரப்பட்டது. ஆனால் அதில் இரு அணிகளும் கோல் ஏதும் போடவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட்டுக்கு விடப்பட்டது.இதில் உருகுவே 4 கோல்களை அடித்தது. கானாவோ, 2 கோல்களை மட்டுமே அடித்ததால் உருகுவே வெற்றி பெற்று விட்டது.இந்த போட்டித் தொடரில் காலிறுதி வரை வந்த ஒரே ஆப்பிரிக்க அணி கானா மட்டுமே. இதனால் ஒட்டுமொத்த ஆப்பிரிக்கர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஆனால் கடுமையாகப் போராடிய கானா கடைசி நிமிடத்தில் தோற்றுப் போனதால் ரசிகர்கள் அதிர்ச்சி் அடைந்தனர். இந்தத் தோல்வியை நம்ப முடியாத கானா வீரர்களோ கண்ணீரைத் துடைக்க முடியாமல் தவித்தனர்.போட்டித் தொடரிலிருந்து கானா வெளியேறியிருந்தாலும், இந்தத் தொடரில் முத்திரை பதித்த முக்கிய அணிகளில் ஒன்றாக கானா மாறியுள்ளது மறுக்க முடியாதது.