இந்திய கால்பந்து அணி மேம்பட்டு வருகிறது என்று பாராட்டியுள்ளார் கானா கால்பந்து அணியின் கோல்கீப்பிங் பயிற்சியாளரான எட்வர்ட் அன்சா.உலகம் முழுவதும் கால்பந்து திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது - முடியவும் போகிறது. ஆனால் இந்த களேபரத்தில் இந்திய கால்பந்து அணி மட்டும் திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல காணப்படுகிறது.இந்திய கால்பந்து அணியைக் குறை கூறிப் பயன் இல்லை. 100 கோடி இந்தியர்களில் உலகத் தரம் வாய்ந்த 11 பேரைக் கூட தேர்ந்தெடுக்க முயற்சிக்காத, முன்வராத, முடியாத இந்திய கால்பந்து சங்கத்தைத்தான் குறை கூற வேண்டும். கிரிக்கெட் பைத்தியத்தால் மற்ற எல்லா விளையாட்டுகளும் சவலைப் பிள்ளைகளாகவே இருக்கும் நிலையை மாற்றினால் எதிர்காலத்தில் இந்தியாவும் சர்வதேச அரங்கில் செமத்தியாக உதைக்கும் வாய்ப்பு ஏற்படும்.இந்த நிலையில் இந்திய கால்பந்து அணியைப் பாராட்டியுள்ளார் கானா நாட்டு கோல்கீப்பிங் பயிற்சியாளர் அன்சா. கானா நாட்டின் சிறந்த கோல்கீப்பர்களில் ஒருவர் அன்சா.கோவாவின் சர்ச்சில் பிரதர்ஸ் அணிக்காக ஐந்து ஆண்டு காலம் ஆடியவர். இந்திய கால்பந்து அணி குறித்து அன்சா கூறுகையில், ஐந்து ஆண்டு காலம் இந்தியாவில் இருந்த நாட்களை என்னால் மறக்க முடியாது. கானா அணியுடன் நான் பிசியாக இருந்தபோதிலும் கூட இந்திய கால்பந்து அணியை தொடர்ந்து கவனித்து வருகிறேன்.தற்போது பாப் ஹட்டன் தலைமையில் இந்திய அணி நன்கு மேம்பட்டு வருகிறது. உடல் அளவிலும், உள்ள அளவிலும் தங்களது தரத்தை இந்திய வீரர்கள் மேம்படுத்திக் கொண்டால் நிச்சயம் உலகக் கோப்பைப் போட்டிக்கு தங்களை உயர்த்திக்கொள்ள முடியும் என்றார் அன்சா.நமக்காக ஆப்பிரிக்காவில் ஒரு இதயம் துடிப்பது உண்மையிலேயே பெருமையான விஷயம்தான்!