தனது குழந்தைகளுக்காக உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு கிளம்பவுள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான்.படு ஜாலியான பார்ட்டி ஷாருக். சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி இயல்பாக இருப்பவர். ஜாலியாக இருக்க விரும்புவர். பிறரின் மகிழ்ச்சியையும் ரசிப்பவர். அப்படிப்பட்டவர் தனது குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பு கொடுக்காமல் போய் விடுவாரா என்ன. இதோ தனது குழந்தைகள் ஆர்யன், சுஹானாவுடன் தென் ஆப்பிரிக்காவுக்குக் கிளம்பவுள்ளார் - உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தைப் பார்த்து ரசிக்க.இதுகுறித்து ஷாருக் தரப்புத் தகவல் கூறுகையில், ஆர்யனுக்கு கால்பந்து என்றால் உயிர். சரியான வெறியன். ஷாருக்கும் கூட ஒரு தீவிர கால்பந்து வெறியர்தான். இரண்டு பேருக்கும் இப்போது கால்பந்து மோகம் தீவிரமாகி விட்டது. இதையடுத்து இறுதிப் போட்டியைப் பார்க்க தென் ஆப்பிரிக்காவுக்குக் கிளம்புகின்றனர். தற்போது ஷாருக்கின் குடும்பத்தினர் லண்டனில் விடுமுறையை அனுபவித்து வருகின்றனர். ஷாருக்குடன் மனைவி கெளரி, இரண்டு குழந்தைகள், சில நெருங்கிய நண்பர்களும் உள்ளனர்.இறுதிப் போட்டிக்காக ஷாருக் தனது குடும்பத்தினருடன் தென் ஆப்பிரிக்கா செல்லவுள்ளதாக கூறியுள்ளார் என்று அத்தகவல் கூறுகிறது.