அட்டகாசமான போட்டியில் உருகுவேயை மயிரிழையில்தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட்டது நெதர்லாந்து.மயிர்க்கூச்செறியும் போட்டியான இது விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் ரசிகர்களை உட்கார விடாமல் செய்து விட்டது.தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பைத் தொடரின் முதல் அரை இறுதிப் போட்டியில் நேற்று உருகுவேயும், நெதர்லாந்தும் மோதின. இழந்த பெருமையை மீட்க உருகுவே போராட்டம் நடத்தியது. முதல் முறையாக கோப்பையை வெல்லும் கனவுக்காக நெதர்லாந்து கடுமையாக மோதியது. இதனால் ஆட்டத்தில் பெரும் விறுவிறுப்பு நிலவியது.உருகுவேயின் கடுமையான போராட்டத்தை சமாளித்த நெதர்லாந்தும் அட்டகாசமாக ஆடியது. ஆட்டம் தொடங்கிய 18வது நிமிடத்திலேயே நெதர்லாந்துக்கு கோல் கிடைத்தது. ஜியோவனி வான் பிராங்கார்ஸ்ட் போட்ட அந்த கோல் நெதர்லாந்துக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது. அதன் பின்னர் மாறி மாறி இரு அணிகளும் கோலடிக்க ஆரம்பித்ததால் ஆட்டத்தில் பரபரப்பு கூடியது. 41வது நிமிடத்தில் உருகுவேயின் டியகோ போர்லான் அபாரமான கோலைப் போட்டு முதல் பாதி ஆட்டத்தை சம நிலையில் முடித்தார்.இரண்டாவது பாதி ஆட்டம் மேலும் விறுவிறுப்பாக மாறியது. 70வது நிமிடத்தில், வெஸ்லி ஸ்னீடர் நெதர்லாந்துக்கான 2வது கோலைப் போட்டார். இதனால் நெதர்லாந்தின் நிலை சற்று தேறியது. இந்த சமயத்தில், அடுத்த மூன்றாவது நிமிடத்தில் (73) அர்ஜன் ராபன் அபாரமான கோலைப் போட்டு நெதர்லாந்தைப் பலப்படுத்தி விட்டார்.ஆனாலும் விடாமல் தொடர்நது மோதியது உருகுவே. இந்த நேரத்தில் 90 நிமிட ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் உபரி நேரத்தில் தடாலடியாக பெரைரா உருகுவேக்காக 2வது கோலைப் போட்டார். ஆனாலும் அது பயன் தரவில்லை.மிக மிக பரபரப்பான இந்தப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் மயிரிழையில் வென்று 3வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து.மிகக் கடுமையான உழைப்பின் மூலம் நெதர்லாந்து நேற்று வெற்றி பெற்றது என்றுதான் சொல்ல வேண்டும். அதேசமயம், உருகுவேயும் சும்மா விடவில்லை. கடைசி வரை கடுமையாகப் போராடிய அந்த அணியும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. ஆனால் அதிர்ஷ்டம் நேற்று நெதர்லாந்துக்குப் போய் விட்டதால் உருகுவே தோல்வியைத் தழுவ நேரிட்டது.இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நெதர்லாந்து. இறுதிப் போட்டிக்கு அது வருவது இது 3வது முறையாகும். மேலும் தொடர்ச்சியான 25வது வெற்றியையும் அது பெற்று சாதனை படைத்துள்ளது.உருகுவேயின் தோல்வியின் மூலம் தென் அமெரிக்காவின் கோப்பைக் கனவும் தகர்ந்து போயுள்ளது. அரை இறுதிக்கு முன்னேறிய ஒரே தென் அமெரிக்க அணி உருகுவே மட்டுமே. இதனால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் நெதர்லாந்து வீரர்களின் அபார ஆட்டத்தால் உருகுவேயின் முன்னேற்றம் தகர்க்கப்பட்டு, தென் அமெரிக்காவின் கனவும் சிதறடிக்கப்பட்டு விட்டது. #13;