தென் அமெரிக்க அணிகளின் கொட்டத்தை ஒரு வழியாக ஐரோப்பிய அணிகள் ஒடுக்கி தாங்கள்தான் கால்பந்தில் ஜாம்பவான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன.கடந்த உலகக் கோப்பைப் போட்டித் தொடரிலும் இதுதான் நடந்தது. தென் அமெரிக்க அணிகள் ஆரம்பத்தில் அட்டகாசமாக ஆடின. ஆனால் போகப் போக ஐரோப்பிய அணிகளின் ஆதிக்கம் மேலோங்கியது. கடைசியில் கப்பும் அவர்களுக்கே கிடைத்தது.இந்த முறையும் அதுவே நடந்துள்ளது. பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே உள்ளிட்ட தென் அமெரிக்க அணிகள் லீக் போட்டிகளில் சிறப்பாக ஆடின. இருப்பினும் நாக் அவுட் ரவுண்ட் ஆரம்பித்த பின்னர் ஐரோப்பிய அணிகள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன.அரை இறுதி வரை தாக்குப் பிடித்த ஒரே தென் அமெரிக்க அணி உருகுவே மட்டுமே. ஜாம்பவான்களான பிரேசில், அர்ஜென்டினா ஆகியவை காலிறுதியோடு காலியாகி விட்டன.அதிலும் அர்ஜென்டினா தோற்ற விதம் கால்பந்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு கட்டுக்கோப்பாக ஆடிய அந்த அணி காலிறுதியில் படு மோசமாக தோற்றது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்து விட்டது.காலிறுதியோடு முடிந்து போன தென் அமெரிக்காவின் கோப்பைக் கனவை உருகுவே மட்டும் அரை இறுதி வரை இழுத்துப் பிடித்து வைத்திருந்தது. ஆனால் அதன் கனவில் நெதர்லாந்து மண்ணைப் போட்டு விட்டது.ஆட்ட நேர்த்தி, கட்டுக்கோப்பு, பந்துளை கோலாக்கும் லாவகம் என அனைத்திலும் தாங்களே ஜாம்பவான்கள் என்பதை மீண்டும் ஒரு ஐரோப்பிய அணிகளான நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்பெயின் ஆகியவை நிரூபித்து விட்டன.குறிப்பாக நெதர்லாந்தின் ஆட்டம் மகா சிறப்பு என்பதில் சந்தேகமே இல்லை. உருகுவேயை அந்த அணி சமாளித்த விதம் அட்டகாசம். அதேபோல ஸ்பெயின் அணியும், ஜெர்மனியை வீழ்த்திய விதம் கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.தற்போது இறுதிப் போட்டியில் இரு ஐரோப்பிய அணிகளே வந்து நிற்கின்றன. இரண்டுமே இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத அணிகள். எனவே யார் வென்றாலும் வெல்லும் அணிக்கு அது பெரும் வரலாறு என்பதில் சந்தேகம் இல்லை.