மஸ்கட்: 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்றில் இந்தியா 5வது போட்டியிலும் பரிதாபமாக தோல்வியைத் தழுவியுள்ளது. மஸ்கட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஓமனிடம் 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி அடைந்தது.
ரஷ்யாவில் 2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
ஆசியா கண்டத்தில் ஓமன், ஈரான், துர்க்மேனிஸ்தான் ஆகிய அணிகளுடன் இந்திய அணி டி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இப்பிரிவில் இந்திய அணிதான் ஒரு புள்ளி கூட பெறவில்லை.
தற்போது நடைபெற்று வரும் 2-ஆவது கட்ட தகுதிச் சுற்றில் கடந்த 8-ந் தேதி துர்க்மேனிஸ்தானிடம் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி கண்டு இந்தியா டி பிரிவில் கடைசி இடத்தில் உள்ளது. கடந்த ஜூன் 11-ந் தேதி பெங்களூரில் நடைபெற்ற ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் இந்தியா, ஓமனிடம் தோல்வியைத் தழுவியிருந்தது.
இந்நிலையில் மஸ்கட்டில் ஓமன் அணியுடன் இந்தியா 2-வது தகுதிச் சுற்றில் நேற்று மோதியது. இப்போட்டியின் முதல் பாதியில் 2 அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை.
2வது பாதியில் ஓமன் அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். 55வது நிமிடத்தில் ஓமன் அணியின் அக்மத் ஒரு கோல் அடித்தார்.
அதன் பின்னர் 67 மற்றும் 85வது நிமிடங்களில் ஓமன் அணியின் அப்துலாசிஸ் 2 அசத்தல் கோல்களை அடித்தார்.
ஆனால் கடைசிவரை இந்திய அணிவீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் பரிதாப தோல்வியைத் தழுவியது.
இது உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இந்தியா சந்திக்கும் 5வது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.