ஜெர்மனிக்கு எதிரான முக்கியப் போட்டியில் இங்கிலாந்து வீரர் பிராங்க் லேம்பார்ட் முதல் பாதி ஆட்டத்தின்போது போட்ட கோலை, நடுவர் இல்லை என்று கூறியதால் இங்கிலாந்து வீரர்கள் பெரும் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளனர். இந்த முடிவு உலக அளவில் கால்பந்து ரசிகர்களிடையேயும், சங்கங்களிடையேயும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.ஜெர்மனிக்கும், இங்கிலாந்துக்கும் இடையே நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் ஜெர்மனி 4 கோல்களும், இங்கிலாந்து ஒரு கோலும் போட்டன. ஆனால் முதல் பாதி ஆட்டத்தில் ஜெர்மனி ஒரு கோல் போட்டிருந்த நிலையில் இங்கிலாந்து வீரர் லாம்பார்ட் ஒரு கோலடித்தார். ஆனால் அது கோல் இல்லை என்று உருகுவேயைச் சேர்ந்த நடுவர் ஜார்ஜ் லாரின்டோ கூறி விட்டார்.உண்மையில், அது நல்ல கோல் என்பது போட்டியைப் பார்த்த அனைவருக்குமே தெரியும். லாம்பார்ட் அடித்த பந்து கோல் கம்பத்திற்குள் அரை மீட்டர் அளவுக்கு உள்ளே போய் விட்டது. அதன் பிறகுதான் ஜெர்மனி கோல் கீப்பர் பந்தைப் பிடித்தார். இதனால் அது கோல் என்பது இங்கிலாந்தின் வாதம். ஆனால் அதை நடுவர் மறுத்து விட்டார்.இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோல் லைன் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும், அங்கு சென்சார்களை வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் எழுந்துள்ளன.இருப்பினும் இந்தக் கோரிக்கைகளை ஃபிஃபா நிராகரித்துள்ளது. இதுகுறித்து ஃபிஃபா தலைவர் செப் பிளேட்டர் கூறுகையில், கால்பந்து விளையாட்டு இந்திரமயமாவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே இதுபோன்ற டெக்னாலஜியை எல்லாம் உள்ளே கொண்டு வர விரும்பவில்லை. மனிதர்களால் விளையாடப்படும், நிர்வகிக்கப்படும், கட்டுப்படுத்தப்படும் விளையாட்டாகவே கால்பந்து நீடிக்க வேண்டும் என விரும்புகிறோம்போட்டிக்கு முன்பாகவே நடுவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து நிறைய போதித்துள்ளோம். எனவே அவர்களது செயல்பாடுகளை தவறு என்று கூற முடியாது என்றார்.ஆனால் உலகம் முழுவதும் லாம்பார்ட் போட்ட கோலை நிராகரித்த நடுவரை கிழி கிழியென கால்பந்து அமைப்புகளும், ரசிகர்களும், மீடியாக்களும் கிழித்துக் கொண்டிருக்கின்றன. உலகக் கோப்பையின் மிகப் பெரிய ஊழல் என்று தலைப்பிட்டு ஸ்பெயின் நாட்டின் மார்கா என்ற விளையாட்டு இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர். இதேபோல இத்தாலியிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.ஜெர்மனியிலும் கூட உருகுவே நடுவரின் முடிவு தவறு என்று விமர்சித்து செய்திகள் வெளியாகியுள்ளன. உருகுவே நடுவர், லாம்பார்ட் அடித்த கோலை அனுமதித்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும் என்பதையும் ஜெர்மனி மீடியாக்கள் ஒத்துக் கொண்டுள்ளன.இதுகுறித்து ஜெர்மனி அணியின் முன்னாள் பயிற்சியாளர் பிரான்ஸ் பேக்கன்பேயர் கூறுகையில், நடுவரின் உதவியாளர்கள் நன்றாகப் பார்த்திருந்தால் அது கோல் என்பதை அறிந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.இப்படிப்பட்ட சர்ச்சைகள் இந்தப் போட்டிக்கு முன்பும் கூட வந்துள்ளன. ஆஸ்திரேலிய அணியின் ஸ்டிரைக்கர் ஹாரி கெவலுக்கு நடுவர் ரெட் கார்டு கொடுத்தபோது போட்டிக்குப் பின்னர் அவர் கூறுகையில், சாதாரண அணிகளை நடுவர்கள் மதிப்பதே இல்லை என்று குற்றம் சாட்டியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.அதேபோல மெக்சிகோ, அர்ஜென்டினாவுக்கு இடையிலான நேற்றைய 2வது போட்டியிலும் ஒரு குழப்பம் காணப்பட்டது. தவேஸ் தனது முதல் கோலை அடித்தபோது அது ஆப்சைட் என்பது பலரின் கருத்து. இதுவும் தற்போது சர்ச்சையாகியுள்ளது.முன்பு மாரடோனா கையால் கோல் போட்டது இன்று வரை பேசப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் லேம்பார்ட் கோல் போட்டதும், அதை உருகுவே நடுவர் நிராகரித்ததும் சேர்ந்துள்ளது.