மாஸ்கோ: இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பல அதிர்ச்சிகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. அந்த வரிசையில் முன்னாள் உலகச் சாம்பியனான பிரேசிலும் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.
21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகின்றன. இந்த உலகக் கோப்பை துவங்கியதில் இருந்தே பல அதிர்ச்சிகளை சந்தித்து வருகிறது. முதலில் முன்னாள் சாம்பியனான இத்தாலி, உலகக் கோப்பை போட்டிக்கே தகுதி பெறவில்லை. நடப்பு சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் மூட்டை கட்டியது.
அதன்பிறகு அர்ஜென்டினா, ஸ்பெயின் ஆகியவை நாக் அவுட் சுற்றில் வெளியேறின. நேற்று நடந்த முதல் காலிறுதி ஆட்டத்தில் உருகுவே வெளியேறியது. அதைத் தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து மற்றொரு முன்னாள் சாம்பியனான பிரேசிலும் வெளியேறியுள்ளது.
தற்போதைய நிலையில் முன்னாள் சாம்பியனான பிரான்ஸ் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. மற்றொரு முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து இன்று நடக்கும் காலிறுதியில் ஸ்வீடனை சந்திக்கிறது.
இந்த உலகக் கோப்பையில் இ பிரிவில் இடம்பெற்றிருந்த பிரேசில் லீக் ஆட்டங்களில் 3ல் இரண்டு வெற்றி, ஒரு டிராவுடன் முதலிடத்தைப் பிடித்தது. முதல் ஆட்டத்திலேயே 1-1 என டிரா செய்து குட்டி அணியான சுவிட்சர்லாந்து அதிர்ச்சி அளித்தது. கோஸ்டாரிகாவை 2-0, செர்பியாவை 2-0 என வென்றது. நாக் அவுட் சுற்றில் 2-0 என மெக்சிகோவை வென்றது.
5 முறை சாம்பியனான பிரேசில் 16வது முறையாக காலிறுதிக்கு நுழைந்தது. இதுவரை 10 முறை அரை இறுதிக்கு நுழைந்துள்ளது. தொடர்ந்து ஏழாவது முறையாக காலிறுதியில் விளையாடிய பிரேசில். 2006, 2010க்குப் பிறகு தற்போது காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.