சென்னை: கோப்பையை வென்ற கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனியோட அணியில் இருந்து 8 பேருக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இது கிரிக்கெட் அல்ல.
கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் போல, கால்பந்துக்கு உள்நாட்டில் நடக்கும் முக்கியமான போட்டி, ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியாகும்.
நான்கு சீசன்கள் முடிந்த நிலையில், இந்தாண்டு இறுதியில் 5வது சீசன் துவங்க உள்ளது. ஐஎல்எஸ் போட்டிகளில் 2014 மற்றும் 2016ல் கொல்கத்தாவைச் சேர்ந்த ஏடிகே அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2015 மற்றும் 2017ல் சென்னையின் எப்சி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த நிலையில் ஐஎஸ்எல் போட்டியில் பங்கேற்கும் சென்னையின் எப்சி அணியில், எட்டு பேருக்கான ஒப்பந்தம் முடிந்துள்ளது. ஆனால், அதை அணி நிர்வாகம் தொடரவில்லை. அதே நேரத்தில் சென்னையின் எப்சி 13 வீரர்களை தக்க வைத்துள்ளது. கோச் ஜான் கிரிகோரி உள்ளிட்டோருடனான ஒப்பந்தத்தையும் நீட்டித்துள்ளது.
சென்னையின் எப்சி அணி இரண்டு முறை கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய தனசந்திர சிங் உள்பட 8 பேரின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. பிக்ரம்ஜித் சிங், கீனான் அல்மீதியா, ஜூட் நோராஹ், புல்கான்சோ கார்டோசா, சஞ்சய் பல்முசு, பவன் குமார், ஷாகின் லால் மெலாலி ஆகியோரின் ஒப்பந்தமும் முடிவுக்கு வந்துள்ளது.
சரி இதற்கும் தோனிக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். ஐபிஎல்லில் இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோப்பையை மூன்றாவது முறை வென்று தந்த தோனி, பிரபல நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோர் சென்னையின் எப்சியின் உரிமையாளர்கள்.