யார் இவர்
நெய்மர் அல்லது நெய்மர் ஜூனியர் என்று அழைக்கப்படும் நெய்மர் டா சல்வா சான்டோஸ் ஜூனியர் உலகம் முழுக்க பிரபலமான வீரர். உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் இவரும் ஒருவர். ஆனால் கடந்த சில வருடங்களாக இவருக்கு நேரம் சரியில்லை என்றுதான் கூறவேண்டும்.
நிறைய பேர்
கடந்த சில வருடங்களாக இவர் மீது நிறைய புகார்கள் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதில் நிறைய இவரது ஒழுக்கம் சரியில்லை, பொதுவில் தவறாக நடந்து கொள்கிறார், பெண்களிடம் மோசமாக நடந்து கொள்கிறார், குடித்துவிட்டு பிரச்சனை செய்கிறார் போன்ற புகார்கள்தான் அதிகம்.
என்ன நடவடிக்கை
இதனால் சில நாட்களுக்கு முன் இவர் மீது அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இவரை அணியின் கேப்டன் பதவியில் இருந்து அணி நிர்வாகம் நீக்கியதும் குறிப்பிடத்தக்கது . அதே போல கடந்த சில மாதங்களாக இவரது ஆட்டமும் அத்தனை சிறப்பானதாக இல்லை.
என்ன புகார்
இந்த நிலையில்தான் தற்போது நெய்மர் பாலியல் புகாரில் சிக்கி இருக்கிறார். பெண் ஒருவர் நெய்மர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளார். நெய்மர் தன்னை பிரான்சில் ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து மது கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளார்.
எப்படி செய்தார்
இது தொடர்பாக வழக்கும் தொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணை விரைவில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் தற்போது நெய்மர் மீது அணி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது. இவரை அணியில் இருந்து தற்காலிகமாக நீக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மறுப்பு
ஆனால் இந்த செய்தியை நெய்மர் மறுத்துள்ளார். இது அடிப்படை ஆதாரமற்ற புகார் என்று நெய்மர் கூறியுள்ளார். தன் மீது சிலருக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். இதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள போவதாக தெரிவித்துள்ளார்.