மும்பை:இந்திய கால்பந்து கூட்டமைப்பின் 2017ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதுக்கு அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐந்தாவது முறையாக இந்த விருதை சேத்ரி பெற உள்ளார்.
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் ஆண்டு கூட்டம் மும்பையில் நடந்தது. இதில், 2017ம் ஆண்டுக்கான சிறந்த வீரர்கள் அறிவிக்கப்பட்டனர்.
அதில் ஆண்கள் பிரிவில் சிறந்த வீரராக கேப்டன் சுனில் சேத்ரி தேர்வு செய்யப்பட்டார். பாய்சுங் பூட்டியாவுக்குப் பிறகு, 100க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய இந்தியர் என்ற சாதனையை சமீபத்தில் புரிந்தார் சுனில் சேத்ரி.
மேலும் சர்வதேச அளவில் தற்போது விளையாடும் வீரர்களில் அதிக கோலடித்தோர் பட்டியில் 65 கோலடித்து, அர்ஜென்டினாவின் மெஸ்ஸியை முந்தி 2-வது இடத்தைப் பிடித்தார் சுனில் சேத்ரி. போர்ச்சுகல்லின் ரொனால்டோ 81 கோல்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ஏற்கனவே, 2007, 2011, 2013, 2014ல் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட சுனில் சேத்ரி, 2017ம் ஆண்டுக்காக ஐந்தாவது முறையாக இந்த விருதைப் பெற உள்ளார்.
மகளிர் பிரிவில் சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு கமலா தேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருதுக்கு அனிருத் தாப்பாவும், சிறந்த வளர்ந்து வரும் வீராங்கனைக்கான விருதுக்கு இ. பான்தோயும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.