மரடோனா மரணம்
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட இரத்தக்கட்டு காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் டியாகோ மரடோனா நேற்றைய தினம் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ரசிகர்கள் இறுதி அஞ்சலி
மேலும் அவர் உடல் வைக்கப்பட்டிருந்த புவெனஸ் அயர்சிலும் ஏராளமான ரசிகர்கள் அவருக்கு நேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர். அப்போது ஏராளமானவர்கள் அங்கு சூழ்ந்ததால், அங்கு கலவரம் நடைபெற்றது. இதையடுத்து கண்ணீர் புகை மற்றும் புல்லட் குண்டுகளை வீசி அவர்களை போலீசார் கலைத்தனர். மேலும் இதில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவமும் நடந்தேறியது.
புதைக்கப்பட்ட மரடோனா
இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் புடைசூழ பெல்லா விஸ்டா கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்ட மரடோனாவின் உடல் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு புதைக்கப்பட்டது. தன்னுடைய ஆட்டத்தால் ரசிகர்களை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொண்ட டியாகோவிற்கு எப்போதும் மறைவில்லை என்று அந்தோணிய அவிலா என்ற பேருந்து ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
சோகத்தில் ரசிகர்கள்
கல்லறைக்கு வெளியில் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் அனைவரது முகங்களிலும் கவலை இருந்தது. இழக்கக்கூடாத ஒன்றை இழந்த சோகம் அவர்கள் முகங்களில் காணப்பட்டது. உலக கோப்பை நாயகனின் இறுதிச்சடங்கு பரபரப்பு, கண்ணீர், சோகம் என கூட்டுக்கலவையாக நடைபெற்றது.