அரையிறுதிப் போட்டி
ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் அரையிறுதிப்போட்டியில் முதல் நிலையில் மோதிய ஏடிகே மோஹுன் பகன் மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணிகள் அந்த போட்டியை 1க்கு 1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தன. இந்நிலையில் இன்றைய தினம் படோர்டா மைதானத்தில் இரண்டாவது நிலை அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
தீவிரமான போட்டி
இந்த போட்டியில் மோதவுள்ள மோஹுன் பகன் மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இரண்டாவது மற்றும் 3வது இடங்களில் வலிமையாக உள்ள நிலையில் கடந்த போட்டியும் டிரா ஆகியுள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டி மிகவும் தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆன்டானியோ ஹபாஸ் தேறுதல்
இந்த தொடரில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய போதிலும் வின்னர்ஸ் கோப்பையை மும்பை சிட்டியிடம் இழந்துள்ளது மோஹுன் பகன் அணி. இந்நிலையில் வீரர்களிடையே அவ்வப்போது கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளதால் இத்தகைய சூழல்களை சந்திக்க வேண்டிவரும் என்று அந்த அணியின் கோச் ஆன்டானியோ ஹபாஸ் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியை எதிர்கொள்ள அறிவுறுத்தல்
இதுபோன்ற பெரிய வாய்ப்பு திரும்பவும் கிடைக்காது என்பதை அணி வீரர்கள் புரிந்து அரையிறுதியின் நெருக்கடிகளை எதிர்கொண்டு ஆட வேண்டும் என்று அவர் அணியின் வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். நம்முடைய மனநிலையை அமைதியாக வைத்துக் கொண்டு தீவிரத்துடன் முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
களமிறக்கிய மோஹுன் பகன்
தீவிரத்தை பொறுமையையும் விடாமல் தொடர்ந்து மனதில் கொண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனிடையே, வெற்றியை கருத்தில் கொண்டு சிறப்பாக கோல்களை அடிக்கும் டேவிட் வில்லியம்ஸ் மற்றும் ராய் கிருஷ்ணாவை இந்த போட்டியில் களமிறக்கியுள்ளது மோஹுன் பகன் அணி.
நார்த்ஈஸ்ட் கோச் அறிவுரை
இந்நிலையில் தலைமை கோச் கலீத் ஜமில் தலைமையில் சிறப்பாக செயல்பட்டுவரும் நார்த்ஈஸ்ட் அணியும் இந்த போட்டியில் தீவிரத்துடன் விளையாடி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேற முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த போட்டியில் கண்டிப்பாக நெருக்கடி இருக்கும் என்றும் அதை என்ஜாய் செய்ய வேண்டும் என்று வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.