பயிற்சியில் பேயர்ன் மூனிச்
நடப்பு புண்டஸ்லிகா சாம்பியனான பேயர்ன் மூனிச் அணி வீரர்கள் நேற்று முழுவதும் உற்சாகமாக பயிற்சி பெற்றனர். யாரும் மாஸ்க் எல்லாம் போட்டிருக்கவில்லை. வழக்கம் போல பயிற்சி எடுத்தனர். அதேசமயம், வீரர்கள் சமூக இடைவெளியையும் மறக்காமல் கடைப்பிடித்தனர். யாரும் அருகருகே போகவில்லை. மூனிச் நகரில் இன்னும் கொரோனாவைரஸ் பரவல் நிற்கவில்லை. தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
சிறு சிறு குழுக்களாக பயிற்சி
நேற்றைய பயிற்சியில் வீரர்கள் மொத்தமாக ஈடுபடவில்லை. கொஞ்சம் கொஞ்சம் பேராக ஈடுபட்டனர். வார்ம் அப், ரன்னிங், ஷூட்டிங் டிரில்ஸ், டெக்னிக்கல் பயிற்சி என சிறு சிறு குழுக்களாக ஈடுபட்டனர். இதனால் வீரர்களுக்கு இடையே அதிக இடைவெளி கிடைத்தது. அரசின் உத்தரவுப்படி தாங்கள் சமூக விலகல் உள்ளிட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதாக பேயர்ன் மூனிச் கிளப்பின் இணையதளத்திலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சமூக இடைவெளியுடன் பயிற்சி
பேயர்ன் மூனிச் அணியின் கோல் கீப்பரும் கேப்டனுமான மானுவல் நெயூர் கூறுகையில், சிறு குழுக்களாக பிரிந்து பயிற்சியில் ஈடுபடுவது புதிதாக இருக்கிறது. ஆனால் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளோம், ஒருவரை ஒருவர் பார்க்க முடிந்தது என்பதில் மகிழ்ச்சிதான். இதற்காக கிளப்புக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். முழுமையான பயிற்சி விரைவில் திரும்பும் என்று நம்புகிறேன். இது கடினமான நேரம் என்பதால் விதிமுறைகளும் தொடர்கின்றன என்றார்.
பெருமளவில் நிதி வசூல்
ஜெர்மன் நாட்டின் 2 டாப் டிவிஷன் கால்பந்துப் போட்டிகளை ஏப்ரல் 30ம் தேதி வரை தள்ளி வைத்துள்ளனர். அதற்குள் நிலைமை சரியானால் அதன் பிறகு இப்போட்டிகள் நடைபெறும். அதன் பின்னர் போட்டிகள் தொடங்கினால் ஜூன் 30ம் தேதிக்குள் இதை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நிலவும் லாக்டவுன் காரணமாக ஏற்பட்டுள்ள நிதி பிரச்சினையை சமாளிக்க பேயர்ன் மூனிச், போரஸ்யா டார்ட்மன்ட், ஆர்பி லீப்ஸிக், பேயர் லாவர்குசன் அணிகள் இணைந்து பெருமளவில் நிதியும் திரட்டியுள்ளன.