கால்பந்து நிறுத்தம்
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தன. கால்பந்து ரசிகர்கள் அங்கே அதிகம். கொரோனா வைரஸ் அச்சத்தால் கால்பந்து போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டதால் கால்பந்து ரசிகர்கள் பழைய போட்டிகளை பார்த்து ஆறுதல் அடைந்து வந்தனர்.
போர்ச்சுகல் கால்பந்து தொடர்
மூன்று மாத காலம் கழித்து அங்கே ஒவ்வொரு நாடாக கால்பந்து போட்டிகள் தொடங்கப்பட்டு வருகிறது. போர்ச்சுகல் நாட்டில் பிரீமியர் லீக் எனப்படும் கிளப் அணிகளுக்கு இடையே ஆன கால்பந்து தொடரும் நீண்ட இடைவெளிக்கு பின் நடக்கத் துவங்கியது.
முதல் இடம்
அதில் முன்னணி அணியான பென்பிகா, மற்றொரு முன்னணி அணியான போர்டோவை லீக் சுற்றில் சந்தித்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் பென்பிகா அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பெற்று போட்டி அணியான போர்டோவை எளிதாக பின்தள்ள முடியும் என்ற நிலை இருந்தது.
போட்டி டிரா
ஆனால், அந்த இரு அணிகள் இடையே நடந்த பரபரப்பான போட்டி டிராவில் முடிந்தது. அதனால், பென்பிகா அணி ரசிகர்கள் கோபம் அடைந்தனர். மைதானத்துக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற நிலையில் பெரும் அளவில் ரசிகர்கள் மைதானத்துக்கு வெளியில் காத்திருந்தனர்.
இரு வீரர்கள் காயம்
பென்பிகா வீரர்கள் சென்ற பேருந்து பாதி வழியில் சென்ற போது அதன் மீது கற்களை வீசி சில ரசிகர்கள் தாக்குதல் நடத்தினர். அதில் இரு வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கற்களை வீசியவர்களை கண்டுபிடிக்காமல் விட மாட்டோம் என பென்பிகா அணி நிர்வாகம் கூறி உள்ளது.