லண்டன்: தடகளப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள, மின்னல் வீரர், உசேன் போல்ட், கால்பந்து போட்டியில் களமிறங்க உள்ளார். உலகப் புகழ்பெற்ற, மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக அவர் விளையாட உள்ளார்.
8 ஒலிம்பிக் தங்கம், 11 முறை உலகச் சாம்பியன் என, கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக, தடகளப் போட்டிகளில், ஜமைக்காவின் உசேன் போல்ட் கால்படாத இடமே இல்லை. ஒரு போட்டியில் செய்த சாதனையை, சாதனைப் புத்தகங்கள் அச்சிடுவதற்குள், மற்றொரு சாதனையைப் புரிந்துவிடுவார்.
இவ்வாறு தடகளப் போட்டிகளில் சாதனைப் படைத்துள்ள உசேன் போல்ட், லண்டனில் சமீபத்தில் நடந்த உலக தடகளப் போட்டிகளில், ஒரே ஒரு வெண்கலம் மட்டும் வென்று ஓய்வு பெற்றார்.
இந்த சாதனை மன்னன், அடுத்ததாக, கால்பந்து போட்டியில் களமிறங்க உள்ளார். அதுவும், உலகப் புகழ்பெற்ற, மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாட உள்ளார்.
கடைசி போட்டியில் காயமடைந்த போல்ட், உடல்நலம் தேறினால், செப்டம்பர் 2ம் தேதி நடக்க உள்ள மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் பார்சிலோனா அணிகளுக்கு இடையேயான போட்டியில் விளையாடுவார்.
மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும் இந்த காட்சிப் போட்டியில், மான்செஸ்டர் அணியின் ஜாம்பவான்கள் ரியான் கிக்ஸ், பால் ஸ்கோல்ஸ் போன்றோருடன் இணைந்து விளையாட உள்ளார் போல்ட்.
கால்பந்து விளையாடுவது எனது கனவு, இங்கிலாந்தின் ஓல்டு டிராபோல்ட் மைதானத்தில் விளையாட வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசை உள்ளது. அது நிறைவேறும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று, போல்ட் கூறியுள்ளார்.