பிரேசிலியா: கால்பந்து ஜாம்பவானும், பிரேசில் அணியின் முன்னாள் கேப்டனுமான பீலே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பீலேயின் உண்மையான பெயர் எட்சன் அரண்டெஸ் டோ நசிமென்டோ. பிரேசில் அணியின் முன்னாள் கேப்டனா கோலோச்சியவர். பீலேவுக்கு தற்போது 74 வயது ஆகிறது. கடந்த 13ம் தேதி பீலேவிற்கு சிறுநீரகக் கல் நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய பீலேக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது.
இதன் காரணமாக திங்களன்று மீண்டும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் பீலே. இந்நிலையில், நேற்று இரவு அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால், பீலே அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப் பட்டதாக தகவல் வெளியானது.
ஆனால், நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் இதற்கு பீலே மறுப்புத் தெரிவித்துள்ளார். அதாவது, 'தனது உடல்நிலை சீராக உள்ளதாகவும், ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் தவறானவை என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சில தனிப்பட்ட காரணங்களுக்காகவே மருத்துவமனையில் தனி அறைக்கு தான் மாறியதாகவும் பீலே விளக்கமளித்துள்ளார்.
ஓ ரே (ராஜா) என்று கால்பந்து ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் பீலே. பிரேசிலின் டிரெஸ் கோராகேயஸ் என்ற நகரில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் உலக கால்பந்து வரலாற்றில் அசாதாரணமான இடத்தைப் பிடித்த வரலாற்று நாயகன். பிரேசில் கால்பந்து அணியின் ஜாம்பவானாக, தூணாக விளங்கியவர். தனது கால்பந்து வாழ்க்கையில், 1363 போட்டிகளில் விளையாடி 1281 கோல்களைப் போட்டவர்.
மேலும் பிரேசில் அணிக்காக 91 போட்டிகளில் ஆடி 77 கோல்களைப் போட்டுள்ள பீலே, தனது 17 வயதிலேயே முதல் உலகக் கோப்பையை வென்ற சாதனைக்குரியவரும் கூட. 1958ம் ஆண்டு நடந்த அந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்வீடனுக்கு எதிராக பீல 2 கோல்களைப் போட்டு பிரேசிலுக்கும், தனக்கும் பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.