கோல் வாய்ப்பு தவறியது
ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் துவக்கத்தில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கானா அணியைச் சேர்ந்த கரேஜ் பேகுசன் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. சென்னையின் எப்சி கோல்கீப்பர் கரன்ஜித் சிங், பந்தை சரியாக கணித்து, கோல் வாய்ப்பை தடுத்து நிறுத்தினார்.
வினீத் வீணாக்கிய வாய்ப்பு
அதற்கு சில நிமிடங்களில் கிடைத்த மற்றொரு வாய்ப்பை, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் வினீத் வீணாக்கினார். இவ்வாறு கோலடிக்க, அந்த அணிக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. அதே போல், சென்னையின் எப்சிக்கும் கோலடிக்க சில வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
கேரளா பிளாஸ்டர்ஸ் சாதனை முறியடிப்பு
இதில் டிரா செய்தாலே, அரை இறுதிக்கு நுழைய அதிக வாய்ப்பு என்பதால், சென்னையின் எப்சி, தடுப்பாட்டத்திலேயே அதிக கவனம் செலுத்தியது. எதிரணியை கோலடிக்க விடாமல் தடுப்பதிலேயே அதிக கவனம் செலுத்தியது. கடைசியில் கோல் ஏதும் இல்லாமல் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதன் மூலம், தொடர்ந்து, 14 போட்டிகளில் கோலடித்து வந்த கேரளா பிளாஸ்டர்ஸ் சாதனையை சென்னையின் எப்சி முறியடித்தது. இந்த ஆட்டத்தில் கிடைத்த ஒரு புள்ளியுடன், மொத்தம், 17 ஆட்டங்களில், 29 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் சென்னையின் எப்சி உள்ளது. மார்ச் 3ம் தேதி மும்பை சிட்டியை சந்திக்க உள்ளது.
அரைஇறுதிக்கு கடும் போட்டி
அதே நேரத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, 25 புள்ளிகளுடன், தொடர்ந்து, 5வது இடத்தில் உள்ளது. அடுத்ததாக, மார்ச் 1ல் பெங்களூரு எப்சியை சந்திக்க உள்ளது. அந்தப் போட்டியைத் தவிர, மற்ற அணிகளின் ஆட்டங்களின் முடிவே, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்யும். முதல் இரண்டு இடங்களில் உள்ள பெங்களூரு எப்சி, புனே சிட்டி அணிகளுடன், நான்காவது இடத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் அணியும், மேலும் இரண்டு ஆட்டங்களில் விளையாட உள்ளன. அவற்றின் முடிவுகளும், அரை இறுதி சுற்றுக்கு யார் நுழையப் போகிறார்கள் என்பதை முடிவு செய்யும்.