ஆக்ரோஷ ஆட்டம்
சாம்பியன் யார் என்பதை தீர்மாணிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரேசில்-அர்ஜென்டினா அணிகள் நேற்று பலப்பரிட்சை நடத்தின. ரியோ டி ஜெனீரோவில் உள்ள மரக்கானா ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெற்றது. தொடக்கம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமாக கோல் போட முனைப்பு காட்டின எனினும் ஆட்டத்தின் முதல் 20 நிமிடங்களில் ஒரு கோல் கூட வரவில்லை.
ஆட்டத்தை மாற்றிய கோல்
பின்னர் ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் வீரர் ஏஞ்சல் டி மரியா முதல் கோல் போட்டு ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார். இதனை சமன் செய்ய பிரேசில் அணியிடம் ஒரு கோல் கூட வராததால் ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது.
வெற்றி
2வது பாதியில் பிரேசில் கோல் போட முயன்ற போதும், அர்ஜெண்டினா மிகச்சிறப்பாக தடுப்பாட்டம் செய்து அசத்தியது. ஆட்ட நேர முடிவில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதன்மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. அர்ஜெண்டினா அணி கடைசியாக 1993ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இந்நிலையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கோப்பையை வென்றுள்ளது. சொந்த நாட்டில் நடந்த இறுதி போட்டியில் பிரேசில் அணி தோல்வியடைந்திருப்பதால் அந்நாட்டு ரசிகர்கள் பெரும் கோபத்தில் உள்ளனர்.
அர்ஜெண்டினா சாதனை
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி இதுவரை 29 முறை கோபா கோப்பை பைனலில் விளையாடி 15 முறை கோப்பையை வென்றுள்ளது. இதன் மூலம் கோபா கோப்பையை அதிக முறை வென்ற உருகுவேயின் சாதனையை (15 முறை) அர்ஜெண்டினா சமன் செய்துள்ளது.