61வது நிமிடத்தில் நுழைந்து
ஆட்டத்தின் 61வது நிமிடத்தில்தான் மைதானத்திற்குள் புகுந்தார் மெஸ்ஸி. நுழைந்த வேகத்தில் புயலாக மாறி பந்தை கோல்களாக மாற்றத் தொடங்கி விட்டார். மெஸ்ஸி மைதானத்திற்குள் வந்தபோது அர்ஜென்டினா அணி 1-0 என்ற கணக்கில் முன்னணியில் இருந்தது.
68வது நிமிடத்தில் முதல் கோல்
68வது நிமிடத்தில மெஸ்ஸி தனது முதல் கோலை அடித்தார். அடுத்து 78வது நிமிடத்தில் அடுத்த கோல் விழுந்தது. அடுத்து 86வது நிமிடத்தில் மேலும் ஒரு கோலடித்தார் மெஸ்ஸி.
90வது நிமிடத்தில்
ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் செர்ஜியோ அகுரோ (இவரும் மாற்று வீரராக களம் இறங்கினார்) அர்ஜென்டினா அணியின் 5வது கோலை அடித்தார். ஆட்டம் 5-0 என்ற கோல் கணக்கில் முடிவுக்கு வந்தது. முன்னதாக முதல் கோலை நிக்கோலஸ் ஓடமென்டி அடித்திருந்தார். ஆட்டத்தின் 7வது நிமிடத்திலேயே அவர் கோலடித்தார்.
2வது வெற்றி
தனது முதல் போட்டியில் சிலி அணியை 2-1 என்ற கணக்கில் அர்ஜென்டினா வீழ்த்தியிருந்தது. நேற்று தனது 2வது போட்டியில் பனாமாவைத் தூக்கிப் போட்டு உதைத்தது. இதையடுத்து அந்த அணிக்கு காலிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாகி விட்டது.
மாரடோனாவுக்குப் பதிலடி
அர்ஜென்டினா அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான மாரடோனா நேற்று முன்தினம்தான், மெஸ்ஸி கேப்டனுக்குரிய தகுதியுடன் இல்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அதிரடியாக ஆடி 3 கோல்கள் அடித்துக் கலக்கி விட்டார் மெஸ்ஸி. என்ன, பனாமா போன்ற சாதாரண அணியிடம் அவர் வீரத்தைக் காட்டி விட்டார் என்பது மட்டும்தான் ரசிகர்களின் ஒரே ஏமாற்றமாகும்.
அர்ஜென்டினாவுக்காக 53 கோல்கள்
நேற்று போட்ட 3 கோல்களுடன் இதுவரை அர்ஜென்டினா அணிக்காக அவர் போட்ட கோல்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. அர்ஜென்டினா அணிக்காக மெஸ்ஸி 109 போட்டிகளில் ஆடி இந்த 53 கோல்களை அடித்துள்ளார்.