கிறிஸ்டியானோ ரொனால்டோ
இந்த நிலையில் கானா அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் 65வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து போர்ச்சுகல் அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார்.
5வது உலகக்கோப்பை
அதுமட்டுமல்லாமல் இந்த கோலை அடித்ததன் மூலம் 5 வெவ்வேறு உலகக்கோப்பைத் தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். 2006ம் ஆண்டு முதல் உலகக்கோப்பை தொடரில் விளையாடி வரும் ரொனால்டோ, 2006ல் ஒரு கோல், 2010ல் ஒரு கோல், 2014ல் 1 கோல், 2018ல் 4 கோல் என மொத்தம் 7 கோல்கள் அடித்திருந்தார். தற்போது நடப்பு உலகக்கோப்பையில் கோல் அடித்ததன் மூலம் 5வது உலகக்கோப்பையில் கோல் அடித்து அசத்தியுள்ளார்.
புதிய சாதனை
இதுவரை மெஸ்ஸி, பீலே, உவே சீலர், மிரோஸ்லாவ் க்ளோஸ் மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் 4 உலகக்கோப்பைத் தொடர்களில் கோல்கள் அடித்து சாதித்திருந்தனர். தற்போது அனைவரின் சாதனையையும் முறியடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனையை படைத்துள்ளார்.
அடுத்த சாதனை
அதேபோல் போர்ச்சுகல் அணியை பொறுத்தவரை புகழ்பெற்ற வீரர் யூசிபியோ உலகக்கோப்பை தொடரில் 9 கோல்கள் அடித்ததே அதிகபட்ச சாதனையாக இருக்கிறது. இதனை முறியடிக்க, ரொனால்டோவுக்கு இன்னும் இரண்டு கோல் தேவைப்படுகிறது. இந்த கத்தார் உலகக்கோப்பை தொடரிலேயே அதனை ரொனால்டோ முறியடிப்பார் என்று ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.