கிறிஸ்டியானோ ரொனால்டோ
நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் இந்த மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றில் போர்ச்சுகல் அணி, ஸ்வீடன் அணியை சந்தித்தது. போர்ச்சுகல் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறங்கியதால் அதிக ரசிகர்கள் இந்தப் போட்டியை காண ஆவலாக இருந்தனர்.
போர்ச்சுகல் வெற்றி
பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் போர்ச்சுகல் அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தியது. கிறிஸ்டியானோ ரொனால்டோ தன் அணிக்காக இரண்டு கோல்களையும் அடித்து இருந்தார். முதல் பாதியில் ஃப்ரீ-கிக்கின் போது ஒரு கோல் அடித்தார்.
100 கோல் சாதனை
அவர் முதல் கோலை அடித்த போது சர்வதேச கால்பந்து அரங்கில் 100 கோல்கள் அடித்து புதிய உச்சத்தை தொட்டார். அதன் பின் இரண்டாவது பாதியில் 72வது நிமிடத்தில் தன் இரண்டாவது கோலை அடித்தார். சர்வதேச அளவில் அது அவரது 101 கோல் ஆகும்.
அதிக கோல் சாதனை
சர்வதேச கால்பந்து அரங்கில் ஈரானின் அலி டாய் 109 கோல்கள் அடித்துள்ளதே சாதனை ஆகும். அந்த சாதனையை நெருங்கிக் கொண்டு இருக்கிறார் ரொனால்டோ. இன்னும் சில போட்டிகளில் 9 கோல்கள் அடித்து அலி டாய் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.