மாஸ்கோ: 21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் கோப்பையை வென்றாலும், உலகெங்கும் பெரும் பாராட்டை பெற்றது குரேஷிய அணி. விளையாட்டில் கலக்கிய அந்த அணியின் வீரர்கள் பெருந்தன்மையிலும் பாராட்டை குவித்து வருகின்றனர்.
21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் அணி கோப்பையை வென்றது. முதல் முறையாக உலகக் கோப்பை பைனலில் விளையாடிய குட்டி நாடான குரேஷியா பெரும் பாராட்டை பெற்றது. பைனலைத் தவிர மற்ற அனைத்து ஆட்டங்களிலும் குரேஷியா வென்றது. குரேஷிய அணியின் வீரர்களின் திறமையான ஆட்டம் உலகெங்கும் அந்த அணியைப் பற்றி பேச வைத்தது.
உலகக் கோப்பையின் முதல் லீக் ஆட்டத்தில் நைஜீரியாவை சந்தித்தது குரேஷியா. ஏசி மிலன் அணிக்காக விளையாடி வரும் நிகோலா காலினிக் அந்த ஆட்டத்தில் களமிறங்கிய 11 பேரில் இல்லை. அணியின் முக்கிய அதிரடி வீரரான காலினிக்கை, அந்த ஆட்டத்தில் இடையில், மாற்று வீரராக இறங்கும்படி கோச் கேட்டார். ஆனால் முதுகு வலி அதனால் இறங்க முடியாது என்று காலினிக் மறுத்துவிட்டார். அதையடுத்து அவர் குரேஷியாவுக்கு திரும்பி அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில் பைனல் வரை நுழைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது குரேஷியா. நாடு திரும்பிய கோச் மற்றும் வீரர்கள் காலினிக்கை சந்தித்து, அவருக்கான வெள்ளிப் பதக்கத்தை கொடுத்தனர்.
ஆனால், உலகக் கோப்பையில் விளையாடவில்லை. அணியின் வெற்றிக்கு உதவாத நிலையில், அந்தப் பதக்கத்தை பெறும் தகுதி தனக்கு இல்லை என்று அதை வாங்க காலினிக் மறுத்தார்.
விளையாடாத போதும் அணியின் சக வீரருக்கு பரிசு அளித்த அணியின் மொத்த வீரர்களும், அதை வாங்க மறுத்ததன் மூலம் காலினிக்கும், தற்போது வெகுவாக புகழப்படுகின்றனர்.