சிறப்பான டேவிட் பெக்காம்
பிரபல முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் ரியல் மாட்ரிட் போன்ற அணிகளுக்காக விளையாடி புகழ்பெற்றவர். இவர், கால்பந்தாட்டத்தின் ஜாம்பவான்களில் ஒருவராக கருதப்படுகிறார். பல்வேறு கால்பந்தாட்ட வெற்றிக்கதைகளின் கருவாக இருந்த இவரது ஆட்டங்கள் சர்வதேச விளையாட்டு ரசிகர்களின் விருப்பத்திற்குரியது.
கடுமையான பயணம்
கடந்த 2013ல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பெக்காம், 2014 முதல் தான் விளையாடிய அணியை மேலும் வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டார். முன்னதாக 2011 மற்றும் 2012களில் தன்னுடைய அணி வெற்றி பெறவும் பெக்காம் காரணமாக இருந்தார். மேலும் 2014ல் சாக்கர் விளையாட்டு அரங்கத்தை அமைக்கும் பணியிலும் முழுமூச்சாக இறங்கினார். ஆனால் அது அவருக்கு எளிதானதாக இல்லை.
எம்எல்எஸ் போட்டி
இந்நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளின் கடுமையான போராட்டங்களுக்கு பிறகு பெக்காமின் சாக்கர் உள் விளையாட்டு மைதான கனவு தற்போது நனவாகியுள்ளது. இதன் முதல் எம்எல்எஸ் முதல் போட்டி நடைபெறவிருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் காரணமாக போட்டி 30 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வீடியோ வெளியீடு
தன்னுடைய மைதானத்தில் முதல் முறையாக எம்எல்எஸ் போட்டி நடைபெறவிருந்த நிலையில், அந்த மைதானத்திற்கு தற்போது தன்னுடைய மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் பெக்காம் திடீர் வருகை புரிந்தார். கொரோனா வைரஸ் காரணமாக வெளியில் வருவதை அனைவரும் தவிர்த்து வரும்நிலையில், தன்னுடைய காலி மைதானத்தை பார்வையிட்ட பெக்காம், அதன் வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பெக்காம் கோரிக்கை
20 ஆயிரம் பேர் அமரக்கூடிய இந்த மைதானத்தின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பெக்காம், இத்தகைய நெருக்கடியான நேரங்களில் விளையாட்டு அடுத்த இடத்திற்கு சென்றுவிடும் என்று குறிப்பிட்டுள்ளார். நம்முடைய மற்றும் நம்முடைய விருப்பத்திற்குரியவர்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளார்.