மாஸ்கோ: ஃபிபா உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது. உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியன்கள் முதல் சுற்றிலேயே வெளியேறுவது தொடர்ந்து மூன்றாவது முறையாக நடந்துள்ளது.
21வது ஃபிபா உலகக் கோப்பை ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக நடப்பு சாம்பியன் ஜெர்மனி இருந்தது. நான்கு முறை உலகக் கோப்பையை வென்றுள்ள ஜெர்மனி, ஐந்தாவது முறையாகவும் வென்று, அதிக முறை கோப்பையை வென்ற பிரேசிலின் சாதனையை சமன் செய்யும் முனைப்புடன் இருந்தது.
எப் பிரிவில் இடம்பெற்றுள்ள ஜெர்மனிக்கு முதல் ஆட்டத்திலேயே அதிர்ச்சி கிடைத்தது. மெக்சிகோ 1-0 என ஜெர்மனியை வென்றது. தனது இரண்டாவது ஆட்டத்தில் ஜெர்மனி 2-1 என ஸ்வீடனை வென்றது. இன்று நடந்த தென்கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால் தான், நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் ஜெர்மனி இருந்தது.
ஆனால், சொதப்பலோ சொதப்பல் என முழு நேரமும் ஒரு நடப்பு சாம்பியனுக்கான கெத்துடன் ஜெர்மனி விளையாடவில்லை. கடைசி கட்டத்தில் 2-0 என தென் கொரியா வென்றது. ஜெர்மனி மூட்டையைக் கட்ட வேண்டியதாயிற்று.
உலகக் கோப்பையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடப்பு சாம்பியன் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளன. 2006ல் உலகக் கோப்பையை வென்ற இத்தாலி, 2010ல் முதல் சுற்றில் வெளியேறியது. 2010ல் வென்ற ஸ்பெயின், 2014ல் வெளியேறியது. 2014ல் வென்ற ஜெர்மனி, தற்போது முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது.
இதற்கு முன் 1998ல் உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ், 2002ல் முதல் சுற்றில் வெளியேறியது.