ஆசன்சியான்: போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டின்ஹோ, தனது பாஸ்போர்ட் திருத்தப்பட்டது என்று தெரியாமல் வந்து விட்டதாக அவரது வக்கீல் கூறியுள்ளார்.
வேண்டும் என்றே போலியான பாஸ்போர்ட்டுடன் அவர் வரவில்லை என்றும் தெரியாமல்தான் வந்து விட்டதாகவும் அவரது வக்கீல் கூறியுள்ளார். பராகுவே நாட்டில் வைத்து ரொனால்டின்ஹோ கைது செய்யப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
2 முறை உலகின் தலை சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றவர் ரொனால்டின்ஹோ. அவரும் அவரது சகோதரர் ரொபர்ட்டோவும் போலியான பாஸ்போர்ட் வைத்திருந்ததாக பராகுவே அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் கடந்த 3 நாட்களாக தலைநகர் அசன்சியானில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பிரேசில் கால்பந்து வீரர் சார்பாக ஆஜரான அவரது வக்கீல் செர்ஜியோ குயிரோஸ், போலி பாஸ்போர்ட் என்பது ரொனால்டின்ஹோவுக்குத் தெரியாது. அவர்களை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் இருவரும் பிரேசில் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் வரும்போது இதுதொடர்பாக நேரில் மனு தாக்கல் செய்யவும் வக்கீல் செர்ஜியோ திட்டமிட்டுள்ளார்.
ரொனால்டின்ஹோ தெரிந்து எந்த குற்றத்தையும் செய்யவில்லை. அவருக்குத் தெரியாமல் நடந்து விட்ட தவறு இது. வேண்டும் என்று அவர் செய்யவில்லை என்றார் செர்ஜியோ.
ரொனால்டின்ஹோ கைதால் பராகுவே மற்றும் பிரேசில் நாட்டில் பரபரப்பு நிலவுகிறது.