மாரடைப்பால் மரணம்
அர்ஜெண்டினாவின் கால்பந்தாட்ட ஜாம்பவான் டியாகோ மரடோனா தன்னுடைய 60வது வயதில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு கால்பந்தாட்ட உலகில் மட்டுமின்றி சர்வசேத அளவில் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் ரசிகர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி இரங்கல்
இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மரடோனா மறைவிற்கு தன்னுடைய இரங்கலை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார். மரடோனா கால்பந்தாட்ட உலகின் மேஸ்ட்ரோ என்று குறிப்பிட்டுள்ள மோடி, அவர் தொடர்ந்து உலகளவில் புகழுடன் விளங்கியதை சுட்டிக் காட்டியுள்ளார்.
ரசிகர்களுக்கு அளித்த மரடோனா
மரடோனா தன்னுடைய கேரியரில் தொடர்ந்து சிறப்பான தருணங்களை ரசிகர்களுக்கு அளித்ததாகவும் கூறியுள்ளார் பிரதமர் மோடி. அவருடைய திடீர் மரணம் அனைத்து தரப்பினரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளதாகவும் அவரது ஆத்மா சாந்தியடைய தான் பிரார்த்திப்பதாகவும் அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் துவக்கத்தில் அறுவை சிகிச்சை
கடந்த நவம்பர் மாத துவக்கத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மரடோனாவிற்கு மூளையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தன்னுடைய பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய சில தினங்களிலேயே இந்த அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.