ஆச்சரியம் கொடுத்த செனகல்
செனகல் அணியின் அட்டாக் பலருக்கும் ஆச்சரியம் கொடுத்த நிலையில், அடுத்தடுத்து இரு முறை செனகல் அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் செனகல் அணியின் முயற்சியை, இங்கிலாந்து அணியின் கோல்கீப்பர் பிக்போர்டு தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக இங்கிலாந்து வீரர்கள் ஆக்ரோஷம் காட்ட தொடங்கினர்.
இங்கிலாந்து முன்னிலை
இங்கிலாந்து அணியின் ஆக்ரோஷத்திற்கு பலனாக 38வது நிமிடத்தில் ஜோர்டன் ஹெண்டர்சன் முதல் கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில், அடுத்த 10 நிமிடங்களில் இங்கிலாந்து ரசிகர்கள் ஏங்கிய நிகழ்வு நடந்தது. உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் மூன்று அசிஸ்ட் கொடுத்துள்ளார். ஆனால் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
இங்கிலாந்து கேப்டன் கேன்
இதனால் ஹாரி கேன் எப்போது கோல் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் பாதியின் கூடுதல் நிமிடத்தில் ஹாரி கேன் தனியாளாக உள்ளே சென்று கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியின் முன்னிலையில் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.
3வது கோல்
தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டத்திலும் இங்கிலாந்து அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. மிட் ஃபீல்டை கடந்து செனகல் வீரர்களால் பந்தை கொண்டு செல்ல முடியவில்லை. அந்த அளவிற்கு இங்கிலாந்து அணி வீரர்கள் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். இதனிடையே 57வது நிமிடத்தில் புகாயோ சாகா இங்கிலாந்து அணிக்காக மூன்றாவது கோலை அடித்தார்.
இங்கிலாந்து வெற்றி
இதனைத் தொடர்ந்து செனகல் அனியின் வெற்றிக்கனவு முடிவுக்கு வந்தது என்றே கூறலாம். அதனை ஏற்றுக்கொள்ளும் வகையில் அனைத்து மாற்று வீரர்களையும் செனகல் அணி களமிறக்கியது. இரண்டாம் பாதி ஆட்டம் முடியும் வரையில் செனகல் அணியால் எந்த கோலும் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் செனகல் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.
பிரான்ஸ் - இங்கிலாந்து
செனகல் அணியை வீழ்த்தியதன் மூலம் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. காலிறுதி சுற்றில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. பலம் வாய்ந்த இந்த அணிகள் மோத உள்ள போட்டி டிச.11ம் தேதி நள்ளிரவில் நடக்க உள்ளது.