தோல்வி
இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் இரு அணிகளுமே தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி சமனனானது. எனவே பெனால்ட்டி ஷூட் அவுட் முறை அறிவிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து அணியில் கேப்டன் கேன், மெக்குயிர் இருவரும் பெனால்டி சூட்டில் கோல் அடித்துவிட, மார்கஸ் ராஷ்போர்ட், ஜாடன் சான்சோ, சாகா ஆகிய மூவரும் கோல் அடிக்க தவறிவிட்டனர். அவர்கள் மூன்று பேரும் வேறு இனப்பிண்னனியை கொண்டவர்கள் ஆகும்.
இனவெறி கருத்துக்கள்
மார்க்கஸ் ராஷ் போர்டின் பூர்விகம் கரிபீயன் தீவுகளில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தவர்கள். புக்காயோ சாகா நைஜீரிய நாட்டின் பின்னணி கொண்டவர். ஜேடன் சாஞ்சோவின் பெற்றோர் வெஸ்ட் இண்டீஸில் இருந்து இங்கிலாந்துக்கு வந்தவர்கள் ஆகும். எனவே வேறு இணத்தை சேர்ந்த இவர்களால் தான் இங்கிலாந்து தோல்வியடைந்தது என ரசிகர்கள் பலரும் மோசமான இனவெறி பதிவுகளை சமூகவலைதளங்களில் செய்தனர். இந்த விவகாரம் உலகம் முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ளது.
மன வருத்தம்
இந்நிலையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வீரர் மார்கஸ் ராஷ்போர்ட், தனது நிலைமை குறித்து ட்விட்டரில் கடிதம் ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் அவர், நான் மார்கஸ் வயது 23, கருப்பினத்தவன். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அனைவரும் என்னிடம் அணியின் வெற்றிகாக கோல் ஒன்றை எதிர்பார்த்தீர்கள், எனது தூக்கத்தில் கூட பெனால்டி ஷாட் அடிப்பது குறித்து சிந்தித்திருந்தேன். அப்படி இருக்கையில் ஏன் களத்தில் கோல் அடிக்க முடியவில்லை என்ற கேள்வி என் மண்டைக்குள் ரணத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனை விளக்க வார்த்தைகளே இல்லை. நான் வேறு வகையான ஷாட்டை முயற்சித்திருக்க வேண்டும்.
அதிரடி பதில்
இறுதிப்போட்டி, 55 வருட கனவு, ஒரே ஒரு பெனால்டி ஷாட். இவை அனைத்திற்கு தற்போது என்னால் சொல்லக்கூடிய ஒன்றே ஒன்று 'மன்னிப்பு' மட்டுமே. ஆனால் எனது பிறப்பிடம், எனது நிறம் ஆகியவற்றிற்கெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது. நான் இங்கிலாந்தின் 3 சிங்க சின்னங்களை நெஞ்சில் ஏந்துவதற்கு பெருமை கொள்கிறேன். இது எனது கனவு. இனவெறி விமர்சனங்களை கடந்து செல்வேன் எனக்கூறியுள்ளார்.
ஆதரவளித்த ரசிகர்கள்
தனக்கு எதிரான விமர்சனங்கள் குறித்து பதிவிட்டதுமட்டுமல்லாமல், தனக்கு ஆதரவளித்த ரசிகர்கள் சிலருக்கும் மார்கஸ் ராஷ்போர்ட் நன்றி தெரிவித்துள்ளார். தனக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் வந்த சில கடிதங்களை வெளியிட்டுள்ள அவர், அவை தனக்கு பெரிய அளவில் மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.