லண்டன் : இங்கிலாந்து கால்பந்து அமைப்பான "The FA", தன் கட்டுப்பாட்டில் நடக்கும் கால்பந்து தொடர்களில், அணியின் மேனேஜர்கள் கண்டிக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு ரெட் கார்டு (Red Card) மற்றும் எல்லோ கார்டு (Yellow Card), வழங்க முடிவு செய்துள்ளது.
பொதுவாக கால்பந்தில், வீரர்கள் விதிகளை மீறி குறிப்பிட்ட தவறுகளை செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக எல்லோ கார்டும், ஆட்டத்தில் இருந்து வெளியேற ரெட் கார்டும் வழங்கப்படும். மேனேஜர்கள் ஆட்டத்திற்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொண்டால், அவர்களுக்கு நடுவர் எச்சரிக்கை செய்யவும், வெளியேறும் படி கூறவும் முடியும். ஆனாலும், இது நடுவரின் முடிவாகவே இருந்தது.
இதை முறைப்படுத்தி உள்ள இங்கிலாந்து கால்பந்து அமைப்பு, தற்போது மேனேஜர்களுக்கான புதிய விதிகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விதிகள் சோதனை அடிப்படையில் 2018-19 இங்கிலாந்து கால்பந்து தொடர்களில் அமல்படுத்தப்பட உள்ளது. இது பிரீமியர் லீக் தொடர்களுக்கு மட்டும் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகளின்படி, ஒரு அணியின் மேனேஜர் நடுவரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தல், எதிரணி அல்லது நடுவரை தரக்குறைவாக பேசுதல், கேலி செய்யும் விதமாக கைதட்டுதல், தண்ணீர் குடுவை அல்லது பிற பொருட்களை உதைத்தல், ரசிகர்களோடு மோதலில் ஈடுபடுதல், எதிரணியினர் அமர்ந்திருக்கும் பகுதியில் நுழைதல் ஆகிய செயல்கள் குற்றமாகக் கருதப்படும். களத்திற்கு வெளியே அமர்ந்திருக்கும் வீரர்கள் தவறு செய்தாலும், அதற்கு மேனேஜர் தான் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு அணியின் மேனேஜர், முதல் முறை குற்றச்செயலில் ஈடுபட்டால் ஒரு எல்லோ கார்டு வழங்கப்படும். இரண்டாவது முறை, எல்லோ கார்டு மற்றும் ரெட் கார்டு வழங்கப்பட்டு பார்வையாளர் பகுதிக்கு வெளியேற்றப்படுவார். அதே போல, நான்கு எல்லோ கார்டுகள் பெற்றால் ஒரு போட்டியும், எட்டு எல்லோ கார்டுகள் பெற்றால் இரண்டு போட்டிகளும், பனிரெண்டு எல்லோ கார்டுகள் பெற்றால் மூன்று போட்டிகளும் தடை பெறுவார். பதினாறு எல்லோ கார்டுகள் பெற்றால் இங்கிலாந்து கால்பந்து அமைப்பின் விசாரணைக்கு உள்ளாக நேரிடும்.
இது குறித்து பேசிய கால்பந்து அமைப்பின் அதிகாரி, "இது ஒரு தெளிவை உருவாக்கவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரங்கில் என்ன நடக்கிறது என அனைவரும் தெரிந்து கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.